தலித்துகள் மீது தாக்குதல்-கலெக்டர் முற்றுகை
மதுரை: தலித் மக்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரை புதிய தமிழகம் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா பி.தொட்டியப்பட்டியில் பஞ்சாயத்துக்கு சொந்தமான நிலத்தை 17 பேருக்கு வீட்டுமனைப் பட்டா போட்டு மாவட்ட நிர்வாகம் வழங்கியது.
அதே பகுதியில் உள்ள தலித் மக்கள் பயன்படுத்தி வந்த இடத்தை சிலர் ஆக்கிரமிக்க முயன்றதாக ஒரு வழக்கு திருமங்கலம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் வீட்டுமனைப்பட்டா வழங்கியதை கண்டித்து தலித் மக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பேரையூர் வட்டாட்சியர் பன்னீர்செல்வம், டிஎஸ்பி ராஜாராஜன் ஆகியோர் முன்னிலையில் தலித் மக்கள் தாக்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் சிற்றரசு, ராமசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு சென்றனர். மாவட்ட ஆட்சியர் அறையை முற்றுகையிட்டு தலித் மக்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். டிஎஸ்பி ராஜராஜனுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
அப்போது அறையை விட்டு வெளியே வந்த மாவட்ட ஆட்சியர் ஜவஹர், தாக்குதலுக்கு ஆளான தலித் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து விசாரிக்க டிஆர்ஓக்கு உத்தரவிட்டார்.