கர்நாடகா தேர்தல்: ஏப். 6ல் பெங்களூர் தமிழ்ச் சங்கம் முக்கிய முடிவு
பெங்களூர்: கர்நாடகா வாழ் தமிழர்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியான நிலையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழர்களின் பங்கு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக ஏப்ரல் 6ல் பெங்களூர் தமிழ்ச் சங்கம் கூடுகிறது.
இதுகுறித்து பெங்களூர் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான வெறுப்பு கடந்த 1970ல் தொடங்கி 1991ல் காவிரி நீர் பிரச்னையின்போது கலவரமாக வெடித்தது. இது நம் வாழ்வியலையே கேள்விக்குறியாக்கிவிட்டது. தமிழர்களை பாதிக்கும் வகையில் கோகாக் மற்றும் சரோஜினி மகிஷி அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
தமிழை ஒரு பாடமாக நடத்திய பள்ளிகளில் தமிழ் நீக்கப்பட்டு வருகிறது. தமிழாசிரியர்கள் ஓய்வுபெற்றால் அந்த பணியிடத்தை நிரப்புவதில்லை. தமிழர்களுக்கு தொழிற்சாலை மற்றும் அரசுப் பணியிடங்களில் வாய்ப்பளிப்பதில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் நிராகரிக்கின்றனர்.
ராஜ்குமார் மற்றும் நாகப்பா கடத்தல், ராஜ்குமார் மறைவு, கர்நாடக மாநிலம் உருவான நாள் ஆகிய நினைவு விழா காலங்களில் தமிழர்கள் மீது வெறுப்பைக் காட்டுகின்றனர்.
கர்நாடகத்தில் உள்ள கன்னட அமைப்புகள் இரு மாநில அரசுகளுக்கும் இடையில் உள்ள பிரச்னைகளை தாங்களாகவே கையில் எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபடுகின்றன. இங்கு நடக்கும் எந்தவித அரசியல் பூசலுக்கோ, மதச் சண்டைகளுக்கோ பெங்களூர் தமி்ழ்ச் சங்கமோ, இங்கு உழைத்துப் பிழைக்கும் தமிழர்களோ எந்த விதத்திலும் பொறுப்பாளிகள் அல்ல.
தற்போது ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு என்ற பெயரில் தமிழர்கள் மீதான வன்முறையை ஒரு குறிப்பிட்ட கும்பல் நடத்தி வருகிறது.
தமிழகத்துக்கான சாலை மற்றும் ரயில் போக்குவரத்து தடுக்கப்படுகிறது. பெங்களூர் தமிழ்ச் சங்கம் தாக்கப்பட்டது. தமிழ் பத்திரிகைகள், டிவி சேனல்களுக்கு தடை விதிக்கின்றனர். தமிழர்களின் வணிக நிறுவனங்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஆபத்து பெருகி வருகிறது.
கர்நாடகம், இந்தியாவின் அங்கம் என்பதை மனதில் கொள்ளாமல், இந்திய அரசியல் சட்டத்துக்கு துளியும் மரியாதை கொடுக்காமல் அரசுக்கு நிபந்தனை விதிப்பதும், அதை நிறைவேற்ற காலக்கெடு விதிப்பதுமாக கன்னட அமைப்பின் தலைவர்கள் முறையற்று நடந்துக் கொள்கின்றனர்.
காவல் துறையின் கீழ்மட்ட அதிகாரிகள் பார்வையாளர்களாக வேடிக்கை பார்த்துக் கொண்டு நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் கலவரக்காரர்கள் எந்த அச்சமும் இல்லாமல் வன்முறையில் ஈடுபட வழி அமைக்கிறது.
இந்நிலையில், தமிழர்களின் உரிமைகளை காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மே மாதம் 10, 16 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்லை பயன்படுத்தி தமிழர்கள் உறுதியான முடிவை எடுக்க வேண்டியுள்ளது.
இதுகுறித்து வரும் 6ம் தேதி ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
மேலும், கர்நாடகாவாழ் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் இந்திய ஒருமைப்பாட்டை காக்கவும் பிரம்மாண்ட பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் வேறுபாடுகளை களைந்துவிட்டு திரண்டு வர வேண்டும். அனுமதி கிடைத்த உடன் பேரணிக்காண தேதி அறிவிக்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications