கன்னட நடிகர்கள் தர்ணா-சரோஜா தேவி, அம்பரீஷ், விஷ்ணுவர்த்தன் பங்கேற்கவில்லை
பெங்களூர்: ஓகேனக்கல் விவகாரத்தில், தமிழ் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு போட்டியாக கன்னட நடிகர்களும் பெங்களூரில் தர்ணா போராட்டம் நடத்தினர்.ஆனால், அம்பரீஷ், விஷ்ணுவர்த்தன், சரோஜாதேவி ஆகிய கன்னட திரையுலக ஜாம்பவான்கள் இதில் கலந்து கொள்ளவில்லை. இதில் அம்பரீஷ், விஷ்ணுவர்த்தன் இருவரும் குடும்பத்துடன் மடிகேரி சென்றுவிட்டனர்.
சரோஜா தேவி பெங்களூரில் இருந்தாலும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அதே போல தமிழ் படங்களில் நடித்துள்ள ரமேஷ் அரவிந்தும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் நடிகைகள் ரம்யா, அனு பிரபாகர், தாரா, ஜெயமாலா ஆகியோர் பங்கேற்றனர்.
பெங்களூர் டவுன் ஹாலில் காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த தர்ணாவில் நடிகர்கள் உபேந்திரா, புனித் ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார், ரவிச்சந்திரன், திரில்லர் மஞ்சு, ஸ்ரீநாத், ஜக்கேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராஜ்குமார் ரசிகர் மன்றத் தலைவர் சாரா கோவிந்தும் பங்கேற்றுள்ளார்.
ராஜ்குமாரின் மூத்த மகனும் நடிகருமான சிவராஜ் குமார் ஆஸ்திரேலியாவில் இருப்பதால் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில் ராஜ்குமாரின மனைவி பர்வதம்மா பங்கேற்றார்.
இந்த போராட்டத்தில் டிவி நடிகர்கள், நடிகைகளும் கலந்து கொண்டனர்.
மாலை 5 மணி வரை இந்த தர்ணா போராட்டம் நடைபெறுகிறது. நடிகர் நடிகர்களைக் காண ஆயி்ரக்கணக்கான ரசிகர்கள் திரண்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.