இலங்கை அகதிகளுடன் வந்த ஈரானியர்கள் கைது
ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த தமிழ் அகதிகளுடன் வந்த ஈரானியர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கையிலிருந்து ஏராளமான தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தவண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று வவுனியாவைச் சேர்ந்த 14 பேர் மன்னாரிலிருந்து படகு மூலம் ராமேஸ்வரம் வந்தனர். அப்போது அவர்களுடன் முகம்மது உசேன் உள்ளிட்ட இரு ஈரானியர்களும் இருந்தனர்.
இதையடுத்து அவர்களை தனியாக பிரித்த கியூ பிரிவு போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீஸாரிடம் கூறுகையில், நாங்கள் இலங்கையில் சமூக சேவையாற்றி வருகிறோம். எங்களுக்கு சிறுநீரக பிரச்சினை உள்ளது. ஆனால் கொழும்பு சென்று வர முடியாத அளவுக்கு அங்கு நிலைமை உள்ளது. இதனால்தான் அகதிகளுடன் சேர்ந்து வந்தோம் என்றனர்.
இருப்பினும் அவர்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் வலுத்ததால் இருவரையும் போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.