இந்தியா 'ஆல் பாஸ்'- சிங்கப்பூர் பிரதமர் புகழாரம்
இந்தியா சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் கடந்துள்ளதை நினைவுகூரும் வகையில் சிங்கப்பூரில் இந்திய தொழில்நிறுவனங்கள் சம்மேளனம் சார்பில் 'இந்தியா - 60' என்ற கருத்தரங்கம் நடந்தது. இதையொட்டி நடந்த விருந்தில் சிங்கப்பூர் பிரதமர் லீ கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறுகையில், ஆசியாவிலேயே மிகப் பெரிய சினிமாத்துறையாக பாலிவுட் வளர்ந்துவிட்டது. வெளிநாட்டு படங்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் இந்திப் படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்திப் படங்கள் பிற நாடுகளையும், மொழிகளையும் கடந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன.
இந்தியர்கள் தயாரிக்கும் பேஷன் ஆடைகள் உலக அளவில் பேசப்படுகின்றன.
கிரிக்கெட்டில் சாதனை, பார்முலா ஒன் கார் ரேஸில் போர்ஸ் இந்தியாவின் முன்னேற்றம் ஆகியவை பாராட்டக்கூடிய அம்சங்கள்.
இந்தியா- சிங்கப்பூர் இடையே பரஸ்பரம் நல்லுறவு பேணப்படுகிறது. இருநாட்டு மக்களின் உணர்வுகளும் மதிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் இன்னும் அதிக அளவில் கூட்டு முயற்சிகள் நடக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று பாராட்டி பேசினார்.