கர்நாடகத்தில் ரஜினி படங்களுக்கு தடை - வாட்டாள் அறிவிப்பு
ஓகனேக்கல் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வர் கருணாநிதி நேற்று அறிவித்தார். இதையடுத்து கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட பல்வேறு கன்னட அமைப்புகளின் தலைவர்கள் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து 10ம் தேதி நடத்தவிருந்த கர்நாடக பந்த்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர்.
அப்போது வாட்டாள் நாகராஜ் பேசுகையில், ரஜினிகாந்த், சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தின்போது எங்களையும், கர்நாடக அரசியல் தலைவர்களையும் இழிவாகப் பேசியுள்ளார்.
மராத்தியரான ரஜினிகாந்த் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் இல்லை. ஆனால் அவருக்கு கர்நாடக மக்கள் அடைக்கலம் தந்து உயர்த்தியும் விட்டனர். ஆனால் அவர் கர்நாடக மக்களுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.
எனவே அவருக்கு இனிமேல் கர்நாடகத்தில் ஒத்துழைப்பு தர மாட்டோம். ரஜினிகாந்த் மற்றும் பிற தமிழ் நடிகர்களின் படங்களை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம். என்ன ஆனாலும் சரி ரஜினிகாந்த் படங்களைத் திரையிட விட மாட்டோம்.
அதேபோல ரஜினிகாந்த் கர்நாடகத்திற்குள் நுழையவும் அனுமதிக்க மாட்டோம். இந்த முடிவில் உறுதியாக உள்ளோம். மற்ற அமைப்புகளும் இதைப் பின்பற்ற வேண்டும் என்றார்.
இந்த நிலையில், தும்கூர் சாலையில் ரஜினிகாந்த்தைக் கண்டித்து கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பைச் சேர்ந்தவர்கள் ரஜினியின் உருவ பொம்மையை தீவைத்துக் கொளுத்தினர். ரஜினி தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.