ரஜினிக்கு சிவசேனா பாராட்டு - அமிதாப்புக்கு குட்டு!
மும்பை: ஒகேனக்கல் பிரச்னையில் தமிழகத்துக்கு ஆதரவாக, உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு, கர்நாடகத் தலைவர்களைக் கண்டித்து மராட்டிய பண்பாட்டை நிரூபித்துள்ளார் ரஜினிகாந்த். ஆனால் அமிதாப் பச்சன் போன்ற நடிகர்கள், மும்பைக்கும், மகாராஷ்டிராவுக்கும் விசுவசாமாக நடந்து கொள்வதே இல்லை என்று சிவசேனாவின் அதிகாரப்பூர்வ இதழ் சாம்னா தலையரங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவின் தலையங்கத்தில், ரஜினியின் உண்ணாவிரதப் போராட்டத்தைப் பாராட்டி எழுதியுள்ளனர். அதேசமயம், அமிதாப் பச்சனை வாரியுள்ளனர்.
சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது: மகாராஷ்டிரத்தில் பிறந்து, கர்நாடகாவில் வளர்ந்து தமிழத்தில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்றவர் ரஜினிகாந்த். ஒகேனக்கல் பிரச்னையில் தமிழகத்துக்கு ஆதரவாக அவர் இருப்பது பாராட்டுக்குரியது.
தான் சார்ந்த மாநிலம் இல்லை என்ற போதிலும், தனக்கு உயர்வு கொடுத்த மாநிலத்தின் பிரச்சினை என்பதால் ஓகனேக்கல் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்து தமிழகத்திற்காக குரல் கொடுத்து தான் உண்மையிலேயே சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்துள்ளார் ரஜினிகாந்த். இதன் மூலம் மராத்திய பண்பாட்டையும் அவர் காப்பாற்றியுள்ளார்.
தனது செயலின் மூலம் அமிதாப் பச்சன் போன்ற சூப்பர் ஸ்டார்களைக் கூட பின்னுக்குத் தள்ளி விட்டார் ரஜினி.
ஆனால் மும்பையால், வாழ்வு பெற்ற அமிதாப் பச்சன் போன்ற நடிகர்கள் மராத்தியர்களுக்காகவும், மகாராஷ்டிர மாநில பெருமைக்காகவும் பாடுபடுவதில்லை. நியாயமாக நடந்து கொள்வதில்லை.
அந்த வகையில் ரஜினிகாந்த் முற்றிலும் மாறுபட்டவர். மும்பையில் வாழும் நடிகர்களில் எத்தனை பேர் இங்குள்ள பிரச்னைக்காக போராடுகிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்த தலையங்கம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமிதாப் பச்சன் கோபமாக பதிலளித்துள்ளார். அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, நான் மகாராஷ்டிராவுக்கு உழைக்கவே இல்லை என்கிறீர்களா?. நான் எதுவுமே செய்யவில்லையா?. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?. நான் கேட்டதற்கு உங்களிடம் பதில் இல்லாவிட்டால், என்னிடம் இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்பது நியாயமற்றது என்றார் அமிதாப்.
பால் தாக்கரே நழுவல்
ஆனால் இந்த சர்ச்சைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.
இதுகுறித்து பால் தாக்கரே கருத்து தெரிவிக்கையில், அமிதாப் பச்சன் எங்களது குடும்ப நண்பர். அவருக்கும், எங்களுக்கும் இடையே அன்பான பந்தம் நிலவுகிறது.
நான் அமிதாப்பச்சனை குறைத்து எதையும் கூறவில்லை. தலையங்கமும் எழுதவில்லை. சாம்னாவில் வெளியான தலையங்கம் தொடர்பாக சில இதழ்கள் சர்ச்சையைக் கிளப்புவது கண்டனத்துக்குரியது.
ஒரு மீடியா செய்தியால் வலுவான எங்கள் நட்பு முறிந்து போய் விடாது என்று கூறியுள்ளார் தாக்கரே.












Click it and Unblock the Notifications