கருணாநிதி முடிவுக்கு எஸ்.எம்.கிருஷ்ணா பாராட்டு
பெங்களூர்: ஓகனேக்கல் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது, பாராட்டுக்குரியது என்று முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்ததைத் தொடர்ந்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசினார் எஸ்.எம்.கிருஷ்ணா.
அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்வர் கருணாநிதி தனது அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அவரது அறிவிப்பு வரவேற்புக்குரியது. அவரது அறிவிப்பால் இரு மாநிலங்களின் நல்லுறவும் காப்பாற்றப்பட்டுள்ளது. மேலும் வலுப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
நான் முதல்வர் கருணாநிதியைத் தொடர்பு கொண்டு பேசி அவருக்குப் பாராட்டு தெரிவித்தேன். கர்நாடகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். அதைத்தான் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
தமிழகத்தில் ஏற்பட்ட நெருக்குதல்கள்தான் தமிழக அரசு இந்தத் திட்டத்ைத நிறைவேற்ற அவசரம் காட்ட முக்கிய காரணம். இதனால்தான் கர்நாடகத்தில் போராட்டங்கள் வெடிக்கும் நிலை ஏர்பட்டது.
இரு மாநிலங்களும் சம்பந்தப்பட்ட விவகாரங்களை சுமூகமாக பேசித் தீர்த்துக் கொள்வதே சிறந்தது.
இந்தப் பிரச்சினை குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் நான் தெரிவித்தேன். அதன் பிறகு டெல்லிக்கும், சென்னைக்கும் இடையே என்ன நடந்தது என்பது குறித்து எனக்குத் தெரியாது.
தமிழகத்தின் நிலையைத் தொடர்ந்து கர்நாடகத்தில் போராட்டங்கள் மேற்கொண்டுள்ள கன்னட அமைப்புகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ரஜினி பேச்சுக்குக் கண்டனம்
சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய பேச்சு தேவையற்றது. அது மிகவும் வன்முறையாக உள்ளது.
தான் என்ன பேசினோம் என்பதை அவர் ஒருமுறை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்படி கடுமையாக அவர் பேசியிருக்கத் தேவையில்லை.
நான் மும்பை சென்றிருந்ததாக அவர் கூறியுள்ளார். மும்பைக்கு ஆளுநராகத்தான் சென்றேன். வேலை தேடிச் செல்லவில்லை.
கர்நாடக பாஜக தலைவர்களும் இந்த விஷயத்தில் நிதானத்துடன் செயல்பட்டிருக்க வேண்டும். அவர்களது ஆவேசப் பேச்சால் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. அவர்களது செயல்பாடு சுயநலத்துடன் கூடியது என்றார் கிருஷ்ணா.