ஓகனேக்கல் திட்டம் நிறுத்திவைப்பு - ஜெ. எதிர்ப்பு
சென்னை: மத்திய அரசிடமிருந்து வந்த நெருக்குதலைத் தொடர்ந்தே ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைப் பொறுத்தவரையில், கர்நாடகத்தினுடைய தயவோ, அனுமதியோ தமிழகத்திற்குத் தேவையில்லை. ஓகனேக்கல் தமிழ்நாட்டிற்குள்தான் இருக்கிறது. நமக்கு வருகிற காவிரி நீரைத்தான் நாம் பயன்படுத்தப் போகிறோம்.
பெங்களூர் குடிநீர்த் திட்டத்தை கர்நாடக அரசு நிறைவேற்றிக் கொள்ளும்போது நாம் ஏன் ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது. எனவே இந்தத் திட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியமே கிடையாது. இதில் தலையிடுவதற்கு கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் கிடையாது.
இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றைக் காத்திடும் பொறுப்பு மத்திய அரசுக்கு இருப்பதால், அந்தப் பொறுப்பை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு முன்வந்து தமிழக மக்களின் உரிமையை காத்திட முன்வர வேண்டும் என்று மத்திய அரசை இந்த மாமன்றம் வலியுறுத்துகிறது என்று முதல்வர் கருணாநிதியால் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இப்போது கர்நாடகத்தில் தேர்தல் முடியட்டும், பின்னர் பதவியேற்கும் புதிய அரசுடன் கலந்து பேசி, தேவைபப்ட்டால் களம் காண்போம் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சட்ட பேரவையில், முதலில் தெரிவிக்காமல், ஒரு சாதாரண புதிய அறிவிப்பைக் கூட மாநில அரசு வெளியிடக் கூடாது என்பதுதான் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் மரபு. இந்த நிலையில், சட்டசபையில் கலந்து ஆலோசிக்காமல் திட்டம் நிறுத்த வைக்கப்படுகிறது என்று அறிவிக்கும் செயலே சட்டவிரோதமானது.
கர்நாடக மாநில தேர்தலுக்கும், தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம். அவர் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய பேச்சல்ல. பேச்சளவில் கூட ஓகனேக்கல்லில் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது.
புதிய கர்நாடக அரசு பதவியேற்றதும் தமிழகத்திற்கு நீதி வழங்கும் என்று நம்புகிறேன் என்று சொன்னதற்கு என்ன அர்த்தம். அப்படியானால் ஓகனேக்கல் குடிநீர்த் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றலாமா, இல்லையா என்று முடிவு செய்யும் அதிகாரம் கர்நாடக அரசுக்குத்தான் உள்ளது என்று ஒப்புக் கொள்கிறாரா. கர்நாடகத்திற்கு இல்லாத அதிகாரத்தை வழங்குகிறாரா.
காவிரி, பாலாறு, முல்லைப் பெரியார் அனைத்து அனைத்து நதி நீர்ப் பிரச்சினையிலும் அண்டை மாநிலங்களுக்கு சாதகமாகவே கருணாநிதி நடந்து கொள்கிறார். இதன் மூலம் தமிழக மக்களுக்கு அவர் துரோகம் இழைத்துள்ளார். மத்திய அரசிடமிருந்து வந்துள்ள நெருக்கடி காரணமாகவே இப்போது இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.