ஓகனேக்கல்: முதல்வர் முடிவு அதிர்ச்சி தருகிறது: சரத்குமார்
சென்னை: திரையுலகமே ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், ஓகனேக்கல் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து சரத்குமார் கூறுகையில், ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்தும் ஒட்டுமொத்த திரையுலகமும் திரண்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியும், அரசின் முயற்சிகள் அனைத்துக்கும் ஒத்துழைப்பு கொடுப்போம், உதவியாக இருப்போம் என தீர்மானமும் போட்டோம்.
இந்த நிலையில் முதல்வர் கருணாநிதி திட்டத்தையே நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்கவுள்ளோம். அதன் பின்னர் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்.
ஓகனேக்கல் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்காக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து பாடுபடும் என்றார் சரத்குமார்.