அமிதாப் இந்தியாவுக்கே சூப்பர் ஸ்டார்: பால் 'பல்டி' தாக்கரே
மும்பை:2 நாட்களுக்கு முன்பு அமிதாப் பச்சனை வாங்கு வாங்கென்று வாங்கி விட்டு இப்போது அமிதாப்பச்சனை புகழ்ந்து பேசி தனது சாம்னா இதழில் எழுதியுள்ளார் சிவசேனா தலைவர் பால் தாக்கரே.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவில், ரஜினிகாந்த்தின் உண்ணாவிரதப் போராட்டத்தைப் பாராட்டியும், அப்படிப்பட்ட மாநில உணர்வு, நன்றியுணர்வு அமிதாப் பச்சன் போன்றவர்களிடம் இல்லை என்றும் கடுமையான தலையங்கம் இடம் பெற்றிருந்தது.
சாம்னா இதழின் ஆசிரியரே பால் தாக்கரேதான். அவரது பார்வையில் படாமல் அதில் எந்த செய்தியும் இடம் பெறாது என்பது மகாராஷ்டிராவில் எல்.கே.ஜி. படிக்கும் குழந்தைகளுக்குக் கூடத் தெரியும்.
அப்படி இருக்கையில் இந்த தலையங்கத்திற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அமிதாப் பச்சன் எனது குடும்ப நண்பர் என்று கூறியிருந்தார் தாக்கரே.
இந்த நிலையில் நேற்றைய சாம்னா இதழில் அப்படியே பல்டி அடித்து அமிதாப் பச்சனை புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது. இந்தியாவுக்கே சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் என்று அதில் புகழ்ந்து தள்ளியுள்ளார் பால்தாக்கரே.
அந்த தலையங்கத்தில், அமிதாப் பச்சன் வெறும் நடிகர் மட்டுமல்ல. குறிப்பிட்ட மாநிலத்திற்கு மட்டும் சொந்தக்காரர் அல்ல. நாட்டுக்கே அவர் சூப்பர் ஸ்டார். எனவே பிராந்தியப் பிரச்சினைகளில் அவரை சம்பந்தப்படுத்திப் பேசக் கூடாது என்று கூறியுள்ளார் தாக்கரே.
மேலும், சாம்னாவின் தலையங்கத்தில் என்ன கூறியிருந்தாலும் அது பச்சனை அவமதிக்கும் வகையிலானது அல்ல. அவர் மிகுந்த மதிப்புக்குரியவர் என்றும் ஜால்ராவை பலமாக தட்டியுள்ளார் தாக்கரே.
அதேசமயம், சின்னச் சின்னப் பிரச்சினைகளில் அமிதாப்பை இழுத்து வேண்டும் என்றே அவருக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக உ.பி. முதல்வர் மாயாவதி மீது பாய்ந்துள்ளார் தாக்கரே.