பணியை தொடங்காத காண்ட்ராக்டர்களுக்கு அபராதம்: கலெக்டர் அதிரடி
மதுரை: சாலைப் பணிகளை தொடங்காத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் மதுரை மாவட்ட கலெக்டர் ஜவஹர்.
மதுரை மாவட்டத்தில் நபார்டு திட்டத்தின் (2006-2007) கீழ் 29 சாலைப் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இப்பணிக்கான உத்தரவு மற்றும் திட்ட அறிக்கையும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு உடனே வழங்கப்பட்டது.
திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட சாலைப் பணிகள் மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். ஆனால், சில சாலைப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை என்றும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரகள் அலட்சியமாக இருப்பதாகவும் மாவட்ட கலெக்டர் ஜவஹருக்கு புகார் வந்தது.
இதையடுத்து நடந்த விசாரணையில் மேலூர்-சிவகங்கை சாலை, தேவன் பெருமாள் பட்டி சாலை, சிலம்பக்கோன் பட்டி-குமாரபட்டி சாலை, பெருங்காமநல்லூர்-அல்லி நகரம் சாலை உள்ளிட்ட 12 சாலைப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அலட்சியமாக இருந்த ஒப்பந்ததாரர்களுக்கு, பணிக்கு ரூ.1000 வீதம், 12 பணிக்கு ரூ.12,000 அபராதம் விதித்து மாவட்ட கலெக்டர் ஜவஹர் உத்தரவிட்டார். இதனால் ஒப்பந்ததாரர்கள் கலங்கிப்போய் உள்ளனர்.