டிராக்டர் மோதி தேமுதிக பிரமுகர் பலி
விழுப்புரம்: பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் தேமுதிக பிரமுகர் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றிய தேமுதிக அவைத் தலைவராக இருந்தவர் ரமணன் (40). இவர் நேற்று முன் தினம் விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள பைக்கில் புறப்பட்டார். அவருடன் ஒன்றிய பொருளாளர் ஏழுமலையும் சென்றார்.
விழுப்புரம் அருகில் சூரப்பட்டு என்ற இடத்தில் சென்றுக் சென்றபோது பின்னால் வந்த மினிவேன் பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய இருவரும் விழுந்தனர். அப்போது எதிரில் வந்த கரும்பு லோடு ஏற்றிய டிராக்டர் இருவரின் மீதும் ஏறியது.
இதில் ரமணன் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். படுகாயம் அடைந்த ஏழுமலையை அப்பகுதியினர் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து காணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.