தமிழக டூருக்கு தயாராகும் கனிமொழி
மதுரை: திமுக மகளிர் மாநாடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்க முதல்வர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள மாநில கட்சிகளும், தேசிய கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு மாநாடு, பேரணிகள் நடத்தி வருகின்றன.
திமுக சார்பில் அமைச்சர் ஸ்டாலின் தலையில் நெல்லையில் இளைஞரணி மாநாடு பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இது ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம் செய்யும் மாநாடாக திமுகவினரால் கருதப்பட்டது.
இந்த மாநாடு திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதிக்கு மிகுந்த சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து எல்லா கட்சிகளும் வியக்கும் வகையில் தேமுதிக சார்பில் திருச்சியில் மகளிர் பேரணி நடத்திக் காட்டினார் விஜயகாந்த்.
புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள சரத்குமாரும் மதுரையில் பிரமாண்ட மாநாட்டை நடத்தினார்.
இந்நிலையில் திமுக ஏற்கனவே முடிவு செய்த பெண்கள் மாநாட்டுக்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டை கனிமொழிக்கான பட்டாபிஷேகமாக அரசியல் நிபுணர்கல் கருதுகிறாரக்ள்.
இந்த பெண்கள் மாநாட்டின் மூலம் கட்சியில் அதிக அளவில் பெண் உறுப்பினர்களை சேர்க்கவும், பெண்கள் மத்தியில் திமுக அரசின் செயல்பாடுகளை கொண்டு செல்ல முடியும் என்றும் திமுக நம்புகிறது.
மேலும், மகளிர் சுய உதவிக்குழுக்களை இந்த மாநாட்டின் மூலம் தக்க வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். வரும் தேர்தலில் பெண்களின் ஓட்டுகளை அள்ள இதைப் பயன்படுத்தவும் திமுக திட்டமிட்டுள்ளது.
இதற்கான பணிகளை துரிதப்படுத்தவும், மாநாடு குறித்து விவாதிக்கவும் அனைத்து மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்க உள்ளாராம் கனிமொழி. அதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய விரைவில் கிளம்ப உள்ளார் என்று கூறப்படுகிறது.