வெளி மாநில டாக்சி நிறுவனத்திற்கு எதிர்ப்பு-கன்னட ரக்ஷன வேதிகே வன்முறை
பெங்களூர்: பெங்களூரில் நட்சத்திர ஹோட்டலில் நடந்த டாக்சி சேவைத் தொடக்க விழாவில் புகுந்த கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பைச் சேர்ந்தவர்கள் அந்த இடத்தை தாக்கி சூறையாடினர்.
வி-லிங்க் என்ற டாக்சி நிறுவனம் பெங்களூரில் மேரு ரேடியோ டாக்சி சர்வீஸஸ் என்ற பெயரில் முன்பே கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் வகையிலான டாக்சி சேவையை தொடங்கியது.
இதுதொடர்பான தொடக்க விழாவுக்கு நேற்று நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கு 20க்கும் மேற்பட்ட கன்ன ரக்ஷன வேதிகே அமைப்பைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்தனர்.
பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் உள்ளூர் டாக்சிகளை நிறுத்த அனுமதி கொடுக்காமல், வெளி மாநிலத்தைச் சேர்ந்த டாக்சி நிறுவனத்திற்கு அனுமதி தரக் கூடாது என்று கூறி தாக்குதலில் ஈடுபட்டனர். அந்த இடமே சூறையாடப்பட்டது. விழா மேடை முற்றிலும் அடித்து நொறுக்கப்பட்டது.
வேதிகே அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு இங்கு இடம் இல்லை. அவர்கள் டாக்சி சேவையை இங்கு நடத்த முடியாது. இதனால் உள்ளூர் டாக்சி டிரைவர்கள், உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றனர்.
வி-லிங்க் டாக்சி நிறுவனம் தனது மேரு நிறுவனத்தின் மூலம் பெங்களூர் நகரில் 500 லோகன் ஏசி டாக்சிகளை இயக்குவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.