டெல்லியில் முன்னாள் விமானப் பணிப் பெண் கொலை
டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த 2 நாட்களில் இரண்டு கொலைகள் நடந்துள்ளன. நேற்று 24 வயதுப் பெண் கொல்லப்பட்டுள்ளார். இதனால் தலைநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் துப்பாக்கிக் கலாச்சாரம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அடிக்கடி அங்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. 2 நாட்களுக்கு முன்புதான் ஒருவர் பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று இரவு ஒரு பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
டெல்லி புறநகரான நோய்டாவின் 31வது செக்டரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் ஷீபா தாமஸ். விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனத்தில் ஏர் ஹோஸ்டஸாக பணியாற்றியவர். தற்போது சாப்டவேர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு தனது ஹூண்டாய் காரில் இரவு 11.30 மணியளவில் அவர் வந்தபோது பைக்கில் வந்த நான்கு பேர் அவரை மறித்து நிறுத்தினர்.
இதையடுத்து அவர்கள் நான்கு பேரும் ஷீபாவுடன் கடுமையாக வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவரது மார்பில் துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பினர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில்தான் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து ஷீபாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால்
அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
ஷீபா கேரளாவைச் சேர்ந்தவர். அவரை கொன்றவர்கள் யார், எதற்காக கொலை செய்தனர் என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications