ஸ்பிரைட் என நினைத்து ஆசிட்டைக் குடித்த சிறுமி பரிதாப சாவு
சேலம்: தர்மபுரி அருகே ஸ்பிரைட் பாட்டிலில் இருந்த ஆசிட்டை, ஸ்பிரைட் என நினைத்துக் குடித்த 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மொரப்பூரைச் சேர்ந்த சண்முகம், வெண்ணிலா தம்பதியினரின் மகள் சன்மதி (3).
சண்முகத்திற்கும், பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த மோதல் முற்றியது. இதையடுத்து சண்முகம் தனது மனைவி, மகளுடன் மொரப்பூர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தார்.
காவல் நிலையத்தில் அவர்களை போலீஸார் நீண்ட நேரம் காத்திருக்கக் கூறினர். இதனால் சண்முகம் தனது குடும்பத்தோடு காவல் நிலையத்திலேயே பல மணி நேரம் காத்திருந்தார்.
இந்த நிலையில் குழந்தை சன்மதி, அங்குள்ள வராண்டாவில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அங்கிருந்த ஸ்பிரைட் பாட்டிலைப் பார்த்த சன்மதி, அது ஸ்பிரைட் என நினைத்து வேகமாக குடித்துவிட்டாள். ஆனால் அதில் இருந்தது, கரைகளை அகற்ற உதவும் ஆசிட் என்பது யாருக்கும் தெரியாமல் போய்விட்டது.
பின்னர் சன்மதியுடன் பெற்றோர் வீடு திரும்பினர். வீடு திரும்பியதும் சன்மதி மயக்கமடைந்தாள். பதறிப் போன பெற்றோர் தர்மபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு சன்மதி உயிரிழந்தாள்.