உண்ணாவிரதம்: 'அர்த்தமில்லாதது'-பாரதிராஜா
சென்னை: தமிழ் திரையுலக நடிகர்-நடிகைகள் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் அர்த்தமே இல்லை, இதனால் தான் அதில் நான் கலந்து கொள்ளவில்லை என டைரக்டர் பாரதிராஜா கூறினார்.
கலைஞர் டிவிக்காக தெக்கித்திப் பொண்ணு என்ற சீரியலை இயக்கி வருகிறார் பாரதிராஜா. இளையராஜா இசையமைக்கும் இந்த சீரியல் வரும் 14ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.
இதுதொடர்பாக நிருபர்களை சந்தித்தார் பாரதிராஜா. அப்போது, தமிழ் திரையுலகமே திரண்டு நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேட்டதற்கு பாரதிராஜா அளித்த பதில்,
காவிரிப் பிரச்சினை தொடர்பாக நெய்வேலியில் நடிகர்-நடிகைகளை இணைத்து நான் ஒரு போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக நடத்தினேன். அதில் ஒரு அர்த்தம் இருந்தது. ஆனால் இந்த உண்ணாவிரத போராட்ட பின்னணியில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. அத்தோடு இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று இதுவரை என்னிடம் யாரும் விளக்கம் கேட்கவும் இல்லை.
நெய்வேலி போராட்டத்தை நான் நடத்தியதற்கு மறுநாள் ஒரு நடிகர் (ரஜினி) தனியாக ஒரு உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். அவர் எதற்காக அப்படி தனியாக நடத்தினார் என்பதும் இன்று வரை எனக்கு புரியவில்லை.
ஓகேனக்கல் பிரச்சினையை எடுத்துக் கொண்டால் மற்ற மாநிலத்தில் உள்ளவர்களிடம் இருக்கும் மொழி உணர்வு நம்மிடம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
வந்தாரை வாழவைக்கும் நிலை தான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. 1962ம் ஆண்டில் நான் பார்த்த அந்த மொழி உணர்வு இப்போது எங்கே போயிற்று? நெருப்பு மாதிரி இருந்த அந்த உணர்வு இப்போது சினிமா-மீடியாக்களால் குறைந்து விட்டது.
யார் எது சொன்னாலும் நம்பி உடனே தலைவராக்கிவிடும் நிலையில் தான் தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.
என்னை பொறுத்த வரையில் இந்த மண்ணின் மைந்தர்கள் தான் நாடாள வேண்டும். இது மண், இனம், மொழி சம்பந்தப்பட்ட விஷயம். ஒவ்வொரு தமிழனுக்கும் இந்த உணர்வு இருந்தாக வேண்டும்.
உண்ணாவிரத மேடையில் நடிகர் சத்யராஜ் தான் உணர்வுப்பூர்வமாக பேசினார். அந்த தமிழுணர்வை நான் வரவேற்கிறேன். அதே உணர்வுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் சக நடிகர் (ரஜினி) பற்றி அவர் பேசியதை மேடை நாகரீகம் கருதியாவது தவிர்த்திருக்க வேண்டும் என்றார் பாரதிராஜா.