கர்நாடகத்திற்கு தமிழக அரசு பஸ்கள் முழு அளவில் ஓடுகின்றன
பெங்களூர்:கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கும், தமிழகத்திலிருந்து கர்நாடகத்திற்கும் தமிழக அரசுப் பேருந்துகள் நேற்று மாலை முதல் முழு அளவில் ஓடத்தொடங்கியுள்ளதாக அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் நிலவி வந்த வன்முறைச் சூழலால் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் தாக்கப்பட்டன. இதேபோல தமிழகத்தில், கர்நாடக அரசுப் பேருந்துகள் தாக்கப்பட்டன.
இந்தப் பதட்டம் காரணமாக தமிழக அரசுப் பேருந்துகள் கர்நாடகத்திற்கு இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கர்நாடகத்தில் அமைதி திரும்பியது. எல்லைப் பகுதியிலும் பதட்டம் குறைந்தது. இதையடுத்து வாகனப் போக்குவரத்து சற்று சீரடைந்தது. தனியார் பேருந்துகள், பிற வாகனங்கள் தங்கு தடையின்றி கர்நாடகத்திற்கு செல்லத் தொடங்கியது.
இருப்பினும் தமிழக அரசுப் பேருந்துகள் அத்திப்பள்ளி, மேட்டூர் ஆகிய தமிழக எல்லைப் பகுதிகள் வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இதனால் அதிக கட்டணம் கொடுத்து தனியார் பேருந்துகளிலும், பிற வாகனங்களிலும் செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில், நேற்று மாலைக்கு மேல் தமிழக அரசுப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் தீர்மானித்தது. கர்நாடக அதிகாரிகளும் பேருந்துகளை இயக்கலாம் என பச்சைக் கொடி காட்டினர். இதையடுத்து மாலைக்கு மேல் கர்நாடகத்திற்கு தமிழக பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல கர்நாடகத்திலிருந்தும் தமிழகத்திற்கு தமிழக அரசுப் பேருந்துகள் ஓடத் தொடங்கின.
தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கான முன்பதிவும் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதனால் ஓசூரில் தங்கியிருந்து பெங்களூரில் பணியாற்றி வரும் தமிழர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications