2 ஆண்டுக்குள் புதிய சட்டசபை வளாகம்-துரைமுருகன்
சென்னை: தமிழக சட்டசபையில் கருணாநிதியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட புதிய சட்டசபை வளாகம் 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சென்னை அரசினர் தோட்டத்தில் இந்த வளாகத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சட்டசபையில் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலளித்த துரைமுருகன்,
அண்ணா சாலையில் உள்ள அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய சட்டசபை கட்டடம் அமைக்கப்படுகிறது. இந்தத் திட்டம் தமிழக பொதுப் பணித்துறையின் 150வது ஆண்டுவிழாவின்போது நிறைவடைகிறது.
இதற்காக அடுத்த 2 ஆண்டுகளுக்குள் அந்தப் பணியை விரைந்து முடிக்க பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
2010-11ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை புதிய சட்டசபை வளாகத்திலேயே தாக்கல் செய்வோம் என்றார். இதை திமுக உறுப்பினர்கள் மேஜைகளை தட்டி வரவேற்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.