ஓகேனக்கல்-தர்மபுரியில் விஜய்காந்த் இன்று ஆர்ப்பாட்டம்
தர்மபுரி: ஓகேனக்கல் குடிநீர் திட்டத்தை மத்திய-மாநில அரசுகள் உடனே நிறைவேற்ற கோரியும், கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் தர்மபுரியில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதில் கலந்து கொள்ள விஜயகாந்த் இன்று காலை சென்னையிலிருந்து கார் மூலம் தர்மபுரி புறப்பட்டார்.
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் பேசுகிறார்.
இதில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தேமுதிக தொண்டர்கள் கார்கள், வேன்கள், லாரிகளில் தர்மபுரியில் வந்து குவிந்துள்ளனர்.
இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கவர்னரிடம் சரத்குமார் மனு:
இதற்கிடையே சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவை ராஜ் பவனில் சந்தித்து ஓகேனக்கல் விவகாரம் தொடர்பாக ஒரு மனு அளித்தார்.
அவருடன் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சென்றனர்.
அந்த மனுவில், கர்நாடகாவில் தேர்தலுக்கு பிறகு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இத்திட்டத்தை எதிர்க்கத் தான் செய்யும். இத் திட்டத்தை நிறைவேற்ற நாம் கர்நாடக அரசிடம் அனுமதி பெற வேண்டியதில்லை.
நீங்கள் உடனே தலையிட்டு இதில் உரிய தீர்வு காண வேண்டும். தமிழகத்திற்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ஓகேனக்கல் திட்டத்தை உடனே நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications