பண வீக்கம் 7.41 சதவீதமாக உயர்வு
கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சமீப காலமாக பண வீக்க விகிதம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. விலைவாசி உயர்வு, உணவுப் பொருட்களின் விலை உயர்வு, இரும்புப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவை பண வீக்க விகிதத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் கடந்த 40 மாதங்களில் இல்லாத அளவாக 7.41 சதவீதமாக பண வீக்க விகிதம் உயர்ந்துள்ளது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரும் பாதிப்படையும் என்று பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
8வது வாரமாக பண வீக்க விகிதம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மார்ச் 29ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 0.41 சதவீத அளவுக்கு பண வீக்கம் உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பண வீக்க விகிதம் 6.54 சதவீதமாக இருந்தது. கடைசியாக கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி 7.76 சதவீத அளவுக்கு பண வீக்கம் இருந்தது. அதன் பின்னர் இப்போதுதான் அபாயகர அளவை நோக்கி பண வீக்கம் உயர்ந்துள்ளது.
பண வீக்க விகிதத்தால் பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். காய்கறிகள், உணவுப் பொருட்கள், சமையல் எண்ணை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன.
பருப்பு, மசாலாப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து கொண்டே போகிறது.
இரும்பு விலை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதனால் வீடு கட்ட நினைப்போர் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
பண வீக்க விகிதத்ைத கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் பொருளாதார வளர்ச்சி பெரும் பாதிப்படையும் என பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.