விலையேற்றத்துக்கு பாஜக தான் காரணம்-லாலு
டெல்லி: அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வுக்கு பாஜக ஆதரவு பெற்ற வர்த்தகர்கள் தான் காரணம் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ஆறாவது சம்பள கமிஷன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு தான், பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்றாலும், மக்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பொருட்கள் விலை உயர்வுக்கு, பாஜக ஆதரவு பெற்ற வர்த்தகர்கள் தான் காரணம். ஆனால் பழியை மத்திய அரசு மீது பாஜக போடுகிறது. தேர்தலில் நாங்கள் தோற்க வேண்டும் என்பதற்காகவே இதை செய்துள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த, மாநில அரசுகளுக்கு தேவையான அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால், ஐந்து மாநில அரசுகள் தான் நடவடிக்கை எடுத்துள்ளன.
பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார் லாலு.
மத்திய அரசுக்கு இடதுசாரிகள் கண்டனம்:
பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, மத்திய அரசிடம் மந்திரக்கோல் எதுவும் இல்லை என மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளதற்கு இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், பணவீக்க உயர்வு பற்றிய மத்திய அரசின் கவலையில் நாங்களும் பங்கு எடுத்துக் கொள்கிறோம். ஆனால், அதைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான், எங்களது விருப்பம்.
மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில், இந்த பிரச்னையை மக்களிடம் கொண்டு செல்வதைத் தவிர வேறு வழி இல்லை என்றார் யெச்சூரி.
இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் ராஜா கூறுகையில், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications