மணல் திருடினால் குண்டாஸ் பாயும்: துரைமுருகன் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி பெற்று இரண்டாம் விற்பனை என்ற பெயரில் கூடுதல் விலைக்கு விற்கின்றனர். இதனால்தான் முறைகேடுகள் நடக்கின்றன. தவறு செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ பேசுகையில், திருச்சி மாவட்டம் ஸ்ரீராமச்சந்திராபுரத்தில் சொந்த பயன்பாட்டுக்கு மட்டும் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

தினமும் 400 முதல் 500 மாட்டு வண்டிகளில் மணல் எடுத்துச் செல்கின்றனர். அதற்காக ஒரு வண்டிக்கு ரூ.40 மட்டுமே கட்டணமாக கொடுக்கின்றனர். ஆனால், இவர்கள் சொந்த உபயோகத்துக்கு அல்லாமல், உள்ளூர் பிரமுகர் ஒருவரது இடத்துக்கு கொண்டு போய் மணலை கொட்டுகின்றனர்.

இரண்டாம் விற்பனை என்ற பெயரில் கோர்ட் உத்தரவைப் பெற்று கொண்டு, அந்த மணலை ரூ.2,000க்கு விற்கின்றனர். இது தவிர, உள்ளூர் தாதாக்கள் ஒரு வண்டிக்கு ரூ.10, ரூ.20 என தண்டல் வேறு வசூலிக்கின்றனர். எனவே, சொந்த பயன்பாட்டுக்கு மணல் எடுத்து வெளியில் விற்கும் மாட்டு வண்டியினர் மற்றும் உள்ளூர் விற்பனையாளர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதிமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், முந்தைய திமுக ஆட்சியில், ஏல முறையில் மணல் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.29 கோடி தான் வருவாய் கிடைத்தது. அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்கவே, அரசே மணல் விற்பனையை ஏற்று நடத்த ஜெயலலிதா முடிவு செய்தார். இதனால் மணல் விற்பனையில் கிடைத்த வருவாய் ரூ.148 கோடியாக உயர்ந்தது.

கடந்த ஆண்டு பொதுப்பணித் துறைக்கான கொள்கைக் குறிப்பில், அரசு மணல் விற்க தொடங்கியதில் இருந்து இதுவரை ரூ.446.31 கோடி வருவாய் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006-07ம் ஆண்டில் ரூ.128.11 கோடி அரசுக்கு வருவாய் கிடைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால், அதிமுக ஆட்சியில் 2 ஆண்டுகள் ஐந்து மாதங்களில் ரூ.318 கோடி வருவாய் கிடைத்திருப்பது தெளிவாகிறது. தற்போது, தேனி மாவட்ட எல்லை, நெல்லை மாவட்ட எல்லை வழியாக கேரளாவுக்கு மணல் கடத்தப்படுகிறது என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், அதிமுக ஆட்சியில், ஒரு கிலோ மணல் கூட வெளி மாநிலங்களுக்கு போகவில்லை என்பது போலவும், திமுக ஆட்சியில்தான் வெளி மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவது போலவும் கூறுகிறார். இதை தடுக்க என்ன செய்யலாம் என்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

சில இடங்களில் தவறுகள் நடக்கின்றன. ஆனாலும், கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் வருவாய் அதிகரித்துள்ளது. தவறு நடக்கவில்லை என்று கூறமாட்டேன். அப்படி தவறு செய்வோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

காங்கிரஸ் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், கேரளாவில் ஒரு பொட்டு மணல் கூட எடுக்க அனுமதிப்படுவதில்லை. இரவு நேரத்தில் கேரளா எல்லையை கண்காணித்தால் தெரியும், நமது வருங்கால சந்ததியினரை பாதிக்கும் வகையில் இயற்கை வளம் இங்கே கொள்ளை போய் கொண்டிருக்கிறது என்றார்.

பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், மணல் கொள்ளை கடந்த ஆட்சியைத் தொடர்ந்து இப்போதும் ஜோராக நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. இது மிகவும் வேதனையளிக்கிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+