நெல்லை, குமரியில் கன மழை: 2 பேர் பலி
சென்னை: நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கன மழைக்கு 2 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது. இதில் நெல்லை மாவட்டம் வடகரை கிராமத்தில் சுவர் இடிந்து கந்தன் என்கிற 71 வயது முதியவர் பலியானார்.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு கிராமத்தில் மின்னல் தாக்கி 16 வயது ரிக்சன் பலியானான். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.
இதற்கிடையே, கன்னியாகுமரியில் உள்ள ஐந்து கிராமங்களில் மழை காரணமாக பரவிய மர்மக் காய்ச்சலுக்கு 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மின்னல் தாக்கி 5 பேருக்கு கண், காது பாதிப்பு
மானூர் அருகேயுள்ள கரம்பையை சேர்ந்தவர் அப்பாத்துரை. விவசாயி. இவரும், இவரது மனைவி அன்னபுஷ்பம் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிலர் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு பலத்த இடியுடன் மழை பெய்ய தொடங்கியது. உடனே அவர்கள் அங்குள்ள ஒரு மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு பலத்த இடியுடன் மின்னல் தாக்கியது. இதில் அப்பாத்துரை, அன்னபுஷ்பம் அதே பகுதியை சேர்ந்த மல்லிகா, தங்கலெட்சுமி, ராமகிருஷ்ணன் ஆகியோர் பாதிக்கப்பட்டனர்.
உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை பாளை ஐகிரவுண்ட் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மின்னல் மற்றும் இடி தாக்கியதில் சிலருக்கு காது, கண் பாதிப்படைந்துள்ளது.












Click it and Unblock the Notifications