டெல்லி தமிழ் சங்கத்துக்கு இடம் மாறும் திருவள்ளுவர் சிலை
இதுகுறித்து டெல்லி தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் இரா.முகுந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த பல ஆண்டுகளாக டெல்லி ராமகிருஷ்ணபுரத்தில் தமிழ் சங்க மார்க்கில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை கவனிப்பாரின்றி, மிகப் பரிதாபமான நிலையில் இருந்தது. ஒரு பொதுக் கழிப்பறையின் எதிரில் இருக்கும் இந்தச் சிலையை யாரும் நெருங்க முடியாத வண்ணம் மிகவும் அசுத்தமான சூழ்நிலையில் அமைந்து இருந்தது, அந்தச் சிலை.
இந்த சிலையை சரியான வகையில் பராமரிக்கும் வண்ணம் டெல்லி தமிழ் சங்க வளாகத்தில் இடம் மாற்ற வேண்டும் என்னும் கோரிக்கையை டெல்லி தமிழ் சங்கம் பல ஆண்டுகளாக வற்புறுத்தி வந்தது.
இந்நிலையில் பிப்ரவரி 1ம் தேதி டெல்லி தமிழ் சங்க விழாவுக்கு வந்த டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்திடம் இது தொடர்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட அவர், தமிழ் புத்தாண்டுக்குள் ஆவன செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.
அதே போல தமிழக முதல்வர் கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோரிடமும் மனுக்கள் அளிக்கப்பட்டன. டெல்லி முதல்வரிடமும் மீண்டும் மனு அளித்தோம்.
தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மத்திய மந்திரிகள் மற்றும் எம்.பிக்களுக்கு இதுகுறித்து கடிதம் எழுதப்பட்டது. கட்சி வேறுபாடின்றி அனைத்து எம்.பிக்களும் டெல்லி முதல்வருக்கு தங்கள் சிபாரிசை அனுப்பி வைத்தனர்.
தமிழக முதல்வரும் இந்த விஷயத்தில் தீவிரமான அக்கறையும், ஆதரவும் காட்டினார்.
இந்த அனைத்து முயற்சிகளின் விளைவாக, இப்போது டெல்லி அரசு, பராமரிப்பின்றி இருக்கும் திருவள்ளுவர் சிலையை டெல்லி தமிழ் சங்க வளாகத்துக்கு இடம் மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.