உட்லண்ட்ஸ் 'டிரைவ்-இன்' ஹோட்டலுக்கு மூடு விழா?

சென்னை அண்ணா சாலை, ஜெமினி மேம்பாலம் அருகே உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டல் உள்ளது. மிகவும் பிரபலமான டிரைவ்-இன் ஹோட்டல் இது.
இந்த ஹோட்டலுக்கு திரைத் துறையினர், தொழிலதிபர்கள், காதல் ஜோடிகள் என பல தரப்பட்டவர்களும் அதிகம் வருவது வழக்கம்.
பயங்கர பிசியான அண்ணா சாலைக்கு அருகே மரங்கள், செடிகளுக்கு மத்தியில் புதைந்து கிடக்கும் இந்த ஹோட்டல் படு நிம்மதியான சூழலில் அமைந்திருப்பதால், பலரும் இங்கு வந்து கார்களில் அமர்ந்தபடி சாப்பிட விரும்புவார்கள்.
ஹோட்டலுக்கு முன்பு உள்ள இடத்தில்தான் கார்களை நிறுத்தி வாடிக்கையாளர்கள் சாப்பிடுவது வழக்கம். ஆனால் இந்த இடம் தமிழக அரசின் தோட்டக்கலைத்துறைக்குச் சொந்தமானது என்பதால் தோட்டக்கலைத்துறை சார்பில் இதை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான இடத்தை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், ஹோட்டலுக்குச் சென்று, உயர்நீதிமன்ற உத்தரவை அங்கு ஒட்டினர். மேலும் கார்களை நிறுத்தவும், சாப்பிடவும் கூடாது என எச்சரித்து நோட்டீஸ் ஒட்டினர்.
மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களை போலீஸாரின் உதவியுடன் அப்புறப்படுத்தினர். இதனால் கடந்த சனிக்கிழமையன்று ஹோட்டல் இயங்க முடியாமல் போனது.
கருணாநிதி-ஸ்டாலின் பார்வை:
இந்த நிலையில் நேற்று முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோரும், தலைமைச் செயலாளர் திரிபாதியும் அங்கு வந்தனர். அரசுக்குச் சொந்தமான இடத்தை அவர்கள் பார்வையிட்டு விட்டுச் சென்றனர்.
இதையடுத்து மறுபடியும் காலியிடத்தில் கார்களை நிறுத்தி வாடிக்கையாளர்கள் சாப்பிட ஆரம்பித்தனர். இந்த நிலையில் இரவு 9 மணிக்கு போலீஸாருடன் தோட்டக்கலைத் துறையினர் வந்தனர். கார்களை நிறுத்தக் கூடாது என்று உத்தரவிட்டனர். போலீஸாரும் கார்களை அகற்றினர்.
பின்னர் நுழைவாயில் மற்றும் வெளியேறும் வாயில் ஆகியவை பூட்டப்பட்டன. இதனால் டிரைவ் இன் ஹோட்டல் தொடர்ந்து செயல்படுவது கேள்விக்குறியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications