தலைமை செயலாளர் போன் ஒட்டு கேட்பா?-அரசு மறுப்பு

டெக்கான் குரோனிக்கிள் நாளிதழ் சமீபத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரது தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக செய்தி வெளியிட்டிருந்தது. இதை முதல்வர் கருணாநிதி உடனடியாக மறுத்தார். டிஜிபியும் மறுத்தார்.
இந்த நிலையில், இன்று மீண்டும் ஒரு செய்தியை டெக்கான் குரோனிக்கிள் வெளியிட்டுள்ளது. அதில், தலைமைச் செயலாளர் திரிபாதியும், லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் டிஜிபி உபாத்யாயாவும் பேசிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கொடநாட் எஸ்டேட் தொடர்பாக திரிபாதி, உபாத்யாயாவுக்கு சில தகவல்களைக் கூறியதாக அந்த செய்தி கூறுகிறது.
இதை தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், உள்நோக்கத்துடன் இந்த செய்தி வெளியாகியுள்ளது. அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த செய்தியை அந்த நாளிதழ் வெளியிட்டுள்ளது.
இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிட்டு வரும் அந்த நாளிதழ் மீது உடனடியாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த செய்தியில் சிறிதளவும் உண்மை இல்லை.
தொடர்ந்து இந்த நாளிதழ் இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிட்டு வருகிறது. எனவேதான் நாளிதழ் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications