நார்வே அமைச்சர் சோல்ஹீமுடன் வைகோ சந்திப்பு
நார்வே சென்றுள்ள வைகோ அந்நாட்டு சர்வதேச வளர்ச்சித் துறை அமைச்சர் எரீக் சோல்ஹீமை சந்தித்துப் பேசினார்.
அப்போது சோல்ஹீமிடம், தமிழர்களாகிய நாங்கள், உங்கள் நாட்டின் மீதும், குறிப்பாக உங்கள் மீதும் மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டு உள்ளோம்.
மறைந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கத்தின் உயிரைக் காத்ததிலும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து செயற்பட்டு வருவதனையும் நாங்கள் மறக்க மாட்டோம்.
எங்கள் மனம் எல்லாம் நிறைந்து உள்ள நன்றி உணர்ச்சியை நேரில் சொல்ல எனக்கு இந்த வாய்ப்புக் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
பின்னர் இலங்கை நிலவரம் குறித்து அரை மணி நேரம் இருவரும் பேசினர்.
இந்த சந்திப்பின்போது, சமாதான பேச்சுவார்த்தைக்கு நார்வேயின் இலங்கைக்கான சிறப்புத் தூதுவருமான ஜோன் ஹன்சன் பேயரும் உடன் இருந்தார்.
ஆர்ட் ஆப் லிவிங் அமைப்பின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஏற்பாடு செய்திருந்த தெற்காசியாவில் மோதல்களும், அமைதியும் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக வைகோ நார்வே சென்றுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.













Click it and Unblock the Notifications