கிரீமி லேயர் அளவுகோலை மாற்றியமைக்க சோனியாவிடம் திமுக எம்பிக்கள் மனு
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டடை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஆனால், இந்த இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவு கோலை (கிரீ மிலேயர்) கொண்டு வர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டவர்களி்ல் வசதி படைத்தோருக்கு இந்த இட ஒதுக்கீடு பொறுந்ததாது என்று கூறியுள்ளது. அதாவது வருட வருமானம் ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் உள்ள குடும்பத்தில் யாருக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் பலனே கிடைக்காது.
இதன்மூலம் இட ஒதுக்கீட்டிற்கான அர்த்தமே அடிபட்டுப் போய்விட்டதாக திமுக, பாமக உள்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந் நிலையில் திமுக எம்.பிக்கள் குழு இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து இது தொடர்பாக மனு ஒன்றை அளித்தது.
மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு தலைமையில் சென்ற இந்த குழுவில் அமைச்சர்கள் ராசா, பழனிமாணிக்கம், வெங்கடபதி, ரகுபதி, திமுக எம்.பிக்கள் குப்புசாமி, கிருஷ்ணசாமி, சிவா, சுகவனம், ஜின்னா, வசந்தி ஸ்டான்லி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
சோனியாவிடம் அவர்கள் அளித்த மனுவில்,
கிரீமி லேயர் பிரிவினரை அடையாளம் காண இப்போதுள்ள பொருளாதார அளவு கோலை (வருடத்துக்கு ரூ. 2.5 லட்சம் வருமானம்) நடைமுறைப்படுத்தினால் அது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பாதிப்பாக அமையும்.
இதனால் இந்த வருமான வரம்பை உயர்த்த வேண்டும்.
விரைவில் 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரவுள்ளன. இந்த பரிந்துரைகள் அமலானால் மத்திய அரசுப் பணியில் குரூப்-டி ஊழியரின் வாரிசுகளுக்குக் கூட பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் பலன் கிடைக்காது.
எனவே இது தொடர்பாக விரைவில் ஆலோசனை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இது தொடர்பாக பிரதமருக்கும் முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதத்தை பாலு அவரிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.