வேலூர் சிறையில் ராஜி்வ் கொலையாளி நளினியை சந்தித்த பிரியங்கா

Subscribe to Oneindia Tamil

Priyanka and Ragul
சென்னை&டெல்லி: கடந்த மாதம் ரகசியமாக வேலூர் வந்த சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜி்வ் காந்தி கொலையாளியான நளினியை சந்தித்துப் பேசியுள்ள விவரம் இப்போது வெளியாகியுள்ளது.

இந்தத் தகவலை பிரியங்காவும் உறுதி செய்துள்ளார்.

கடந்த மாதம் 19ம் தேதி பிரியங்கா காந்தி ரகசியமாக வேலூர் வந்து சென்றார். அங்குள்ள தங்கக் கோவிலுக்கு அவர் தரிசனம் செய்ய வந்ததாகக் கூறப்பட்டது. சாதாரண உடையில் இருந்த இரு கமாண்டோக்களுடன் விமானம் மூலம் சென்னை வந்த அவரை மாநில உளவுப் பிரிவினர் ரகசியமாக வேலூர் அழைத்துச் சென்றனர்.

வழியில் ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் காந்தியின் நினைவிடத்திலும் பிரியங்கா அஞ்சலி செலுத்ததினார். இந்தச் செய்திகள் அடுத்த நாள் தான் பத்திரிக்கைகளில் கசிந்தன.

இந் நிலையில் அவரது வேலூர் வருகை கோவிலுக்கு செல்வதற்காக மட்டுமல்ல, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை சந்திக்கவே அவர் வந்தார் என்ற விவரம் இப்போது வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தி வெளியில் வர காரணமாக இருந்தது சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரான ராஜ்குமார். இவர், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வேலூர் சிறை கண்காணிப்பாளருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

அதில், பிரியங்காவை நளினி சந்தித்துள்ளார். எந்த சட்ட விதியின் கீழ் அவரை சந்தி்க்க அனுமதி தரப்பட்டது?, அப்போது யாரு உடன் இருந்தனர்?, இந்த சந்திப்பு எவ்வளவு நேரம் நீடித்தது?, இருவரும் என்ன பேசினர்? ஆகிய தகவல்களை தருமாறு ராஜ்குமார் கேட்டுள்ளார்.

ஆனால், இதற்கான பதில் ராஜ்குமாருக்கு சிறைத்துறையிடமிருந்து கிடைத்ததா என்று தெரியவில்லை.

இருப்பினும் இந்த சந்திப்பு குறித்த தகவல் அவர் மூலமாக வெளி வந்துவிட்டது.

இந் நிலையில் இந்தச் சந்திப்பை நளினியின் தாயார் நர்ஸ் பத்மா, உறுதி செய்துள்ளார். கோவையில் உள்ள அவர் இச் சந்திப்பை உறுதி செய்தார்.

அதே போல நளினியின் வழக்கறிஞர்கள் துரைசாமி, இளங்கோவன் ஆகியோரும் இச் சந்திப்பை உறுதி செய்துள்ளனர். தன்னை பிரியங்கா சந்தித்ததாக நளினி தங்களிடம் கூறியதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

சந்தித்தது உண்மை-பிரியங்கா:

இந் நிலையில் இதுவரை அமைதி காத்து வந்த பிரியங்காவும் சந்திப்பை உறுதி செய்துவிட்டார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,

நான் வேலூர் போனதும், நளினியை சந்தித்தும் உண்மை. அது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட பயணம். என் வாழ்வில் நடந்த அந்த பயங்கரம் (ராஜிவ் கொலை) குறித்த தகவல் பெறவும், அமைதி வேண்டியும் அவரை சந்தித்தேன்.

எனக்கு கோபம், வன்முறை, வெறுப்பு இதில் நம்பிக்கை இருந்ததில்லை. இந்த விஷயங்கள் என் வாழ்வை வென்றுவிடக் கூடாது என்று நினைப்பவள் நான்.

என் பேரிழப்புக்கான (தந்தையின் படுகொலை) காரணத்தை அறியவே சென்றேன் என்று கூறியுள்ளார் பிரியங்கா.

ராஜிவ் கொலையில் நேரடியாக ஈடுபட்ட சிவராசன், தனு, சுபா, ஹரிபாபு, நளினி ஆகிய 5 பேர் கொண்ட குழுவில் இப்போது உயிருடன் இருப்பது நளினி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

1991ம் ஆண்டு மே 21ம் தேதி நடந்த ராஜிவ் கொலையில் நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது நளினிக்கு வயது 26. ஆனால், அவரது குழந்தை மேகரா அனாதையாகிவிடும் என்று சோனியா காந்தி கருணை காட்டியதால் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இப்போது நளினிக்கு வயது 43.

ராஜிவ் காந்தி கொலையி்ன் வலியில் இருந்து இன்னும் அவரது குடும்பம் மீளவில்லை என்பதையே இந்தச் சந்திப்பு காட்டுகிறது.

பேசியது என்ன?:

இந்தச் சந்திப்பு குறித்து தனது வழக்கறிஞர்களிடம் நளினி நிறையவே பேசியிருக்கிறார். அதன் விவரம்:

நளினியை சந்தித்தபோது மிக அமைதியாக, அன்பாகப் பேசினாராம் பிரியங்கா.

என் அப்பா மிக நல்ல மனிதர், அவரைப் போய் எதற்காகக் கொன்றீர்கள் என்று பிரியங்கா கேட்க, அதற்கு தன்னால் பதில் ஏதும் சொல்ல முடியவில்லை என தனது வழக்கறிஞர்களிடம் நளினி தெரிவி்த்துள்ளார்.

கிட்டத்தட்ட 1 மணி நேரம் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

இந்த சந்திப்பு நடக்க மத்திய உளவுப் பிரியான ஐ.பி. உதவியுள்ளது. மார்ச் 11ம் தேதி ஐ.பியைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் வேலூர் சிறைக்கு வந்து நளினியை சந்தித்துள்ளார். அப்போது பிரியங்காவின் படத்தைக் காட்டி இவர் உங்களை சந்தி்க்க விரும்புகிறார். நீங்கள் தயாரா என்று கேட்க, நளினி உடனே சந்திக்க ஒப்புக் கொண்டாராம்.

இதையடுத்து மார்ச் 18ம் தேதி பங்கஜ் குமார் என்ற இன்னொரு ஐ.பி. அதிகாரி நளினியை சந்தித்து, நாளை உங்களை பிரியங்கா சந்திப்பார் என்று தெரிவித்துவிட்டுப் போனார்.

இதையடுத்து இனிப்புகளுடன் பிரியங்காவை சந்திக்க மறுநாள் நளினி காத்திருக்க, இனிப்புகளை வழங்க ஐ.பி. தடை போட்டுவிட்டது. சிறையில் ஒரு அறைக்குள் நளினி அழைத்துச் செல்லப்பட அங்கு பிரியங்கா ஏற்கனவே வந்து காத்திருந்திருக்கிறார்.

பின்னர் இருவரும் தனியே சந்தித்துப் பேசியுள்ளனர்.

மிக உணர்ச்சிமயமாகக் காணப்பட்ட பிரியங்கா, நளினிக்கு மிக நெருக்கமாக அமர்ந்து மிக அன்பாகப் பேசியுள்ளார். எதற்காக என் தந்தை கொல்லப்பட்டார்?, இதனால் யாருக்கு என்ன லாபம்?, கொலையில் உங்களது பங்கு என்ன? என்று பிரியங்கா கேள்விகள் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த நளினி, கடைசி வரை எனக்கு அந்தக் கொலை பற்றி ஏதும் தெரியாது. நான் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்றது உண்மை. ஆனால், எதற்காக போகிறோம் என்று அப்போது எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

என் தந்தை நல்ல மனிதர், அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தால் இந்தக் கொலையை செய்திருக்க மாட்டீர்கள் என்று பிரியங்கா சொல்ல பதிலே அதும் சொல்லாமல் அமர்ந்திருக்கிறார் நளினி.

இந்தக் கொலையை திட்டமிட்டது யார்? என்று பிரியங்கா கேட்டுள்ளார். இதற்கு தனக்கு பதில் தெரியவில்லை என்று நளினி கூறியுள்ளார்.

அதே போல கொலையை நடத்தியது யார்? என்று பிரியங்கா கேட்க, தனு தான் குண்டை வெடிக்கச் செய்தார், அவருக்கு மட்டும் தான் இந்தக் கொலைக்கான பின்னணி, காரணம் யார் போன்ற முழு விவரங்களும் தெரியும் என்று கூறியுள்ளார் நளினி.

எல்டிடிஈக்கு தொடர்பு உண்டா?:

இந்தக் கொலையில் எல்டிடிஈக்கு தொடர்பு உண்டா? என்றும் பிரியங்கா கேட்டுள்ளார். இதற்கு நளினி, எனக்கு அது குறித்து சரியாகத் தெரியவில்லை. ராஜிவைக் கொல்ல தனுவுக்கு யார் உத்தரவு போட்டது என்றும் எனக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளார் நளினி.

மேலும் இந்தக் கொலையாளிகளிடம் போய் நீங்கள் எப்படி சேர்ந்தீர்கள் என்று பிரியங்கா கேட்டுள்ளார். அதற்கு பதில் தந்த நளினி, நான் சிறு வயதில் இருந்தே அன்புக்காக ஏங்கினேன். என்னிடம் யார் அன்பாக இருந்தாலும் அவர்களுடன் ஒன்றி விடுவேன், உதவுவேன். அந்த வகையில் தான் சிவராசன் (ஒற்றைக் கண் சிவராசன்), முருகன் (நளினியின் கணவர்) ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது என்று கூறியுள்ளார் நளினி.

முருகன் எல்டிடிஈ உறுப்பினரா என்று பிரியங்கா கேட்க, முருகனுக்கும் கூட இந்தக் கொலை குறித்த விவரங்கள் தெரியாது. சிவராசன், தனு, சுபா ஆகியோர் ராஜிவை கொல்லப் போகிறார்கள் என்ற விவரமே முருகனுக்குத் தெரியாது என்று கூறியுள்ளார் நளினி. என்னைப் போலவே அவருக்கும் கடைசியில் தான் எல்லாம் தெரிந்தது என்று கூறியுள்ளார்.

சந்திப்பு ஏன்?:

இந்தச் சந்திப்பு குறித்து நளினியிடம் பிரியங்கா கூறுகையில், நான் யார் அனுப்பியும் உங்களை சந்திக்க வரவில்லை. நான் தான் உங்களை சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். என் வாழ்வில் நடந்த அந்த துயரத்துக்கான காரணம் தேடித்தான் இங்கு வந்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் தனது குழந்தைகள், படிப்பு குறித்தெல்லாம் பேசிய பிரியங்கா, நளினியின் மகள், அவரது கல்வி, தாயார், அவர்களது நிலைமை குறி்த்தும் விசாரித்துள்ளார்.

பச்சை நிறப் புடவையில் மிக எளிமையாக வந்த பிரியங்கா, என்னிடம் மிக அன்பாகப் பேசினார் என்று கூறியுள்ளார் நளினி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+