அம்பேத்கர் படத்திற்கு அவமரியாதை-தேனி அருகே பரபரப்பு
தேனி: தேனி மாவட்டம் கோடங்கிப்பட்டி கிராமத்தில் அம்பேத்கர் படத்திற்கு சில விஷமிகள் அவமரியாதை செய்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. அங்கு போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோடங்கிப்பட்டி கிராமத்தில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் படம் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்னொரு சமூகத்தினருக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
இந்தச் சூழ்நிலையில் நேற்று அம்பேத்கர் படத்திற்கு எதிரே விஷமிகள் சிலர் செருப்புகளை மாலை போல தொங்க விட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திரண்டனர். இதையடுத்து போலீஸார் வரவழைக்கப்பட்டனர். இரு பிரிவினருக்கும் இடையே மோதல் மூண்டு விடாமல் தடுக்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.