விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பரிதாப பலி
சென்னை: கழிவு நீர் அகற்றும்போது விஷவாயு தாக்கி 3 தொழிலாளிகள் பரிதாபமாக இறந்தனர்.
சென்னை பல்லாவரத்தை அடுத்த நாகல்கேணி மசூதி தெருவில் தனியார் தோல் தொழிற்சாலை உள்ளது. இங்குள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணி நேற்று நடந்தது.
திருநீர்மலையை சேர்ந்த ரவி (43), ராஜா (36), குன்றத்தூரைச் சேர்ந்த முத்துராமன் (40) ஆகியோர் கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தொட்டியை சுத்தம் செய்ய ஒருவர் பின் ஒருவராக தொட்டிக்குள் இறங்கினர். அப்போது விஷ வாயு தாக்கி மூவரும் மயங்கி தொட்டிக்குள் விழுந்தனர்.
இதைப் பார்த்த தொழிற்சாலை மேலாளர் ஷாஜகான் அவர்களை காப்பாற்ற முயன்றார். அவரும் விஷ வாயு தாக்கி மயங்கி விழுந்தார்.
தொழிற்சாலை ஊழியர்கள் அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரவி, ராஜா, முத்துராமன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஷாஜகானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.