சுனாமி-புதுக்கோட்டைக்கு மத்திய அரசு ரூ.9.37 கோடி கூடுதல் நிதி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் சுனாமி பாதித்தவர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்துக்கு மத்திய அரசு கூடுதலாக ரூ.9.37 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2004 டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட பயங்கர சுனாமியினால் புதுக்கோட்டை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகளையும் உடைமைகளையும் பறி கொடுத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல்மேல்குடி மற்றும் அவுடையார் கோயில் பகுதிகளில் வீடுகளை இழந்த 2,343 குடும்பங்களுக்கு ராஜிவ்காந்தி மறுவாழ்வுத் திட்டத்தின்கீழ் தலா ரூ.2.38 லட்சம் செலவில் குடியிருப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர முடிவு செய்யப்பட்டது. இதற்காக முதற்கட்டமாக ரூ.55.76 கோடியை தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியது.
இதில் மணல்மேல்குடி பகுதியில் 1,712 வீடுகளும், ஆவுடையார் கோயில் பகுதியில் 631 வீடுகளும் கட்டப்படுகின்றன.
இந்தநிலையில் இந்த திட்டத்துக்காக மேலும் ரூ.9.37 கோடியை கூடுதல் நிவாரணமாக மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.40,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications