தலைமைச் செயலகம் எதிரே ஓடும் பஸ்சில் தீ!
சென்னை: சென்னை தலைமை செயலகம் அருகே சென்று கொண்டிருந்த மாநகர பேருந்தில் திடீரென தீப் பிடித்துக் கொண்டது. இதையடுத்து பயணிகள் அலறியடித்து இறங்கி ஓடினர்.
சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்து ஒன்று பிராட்வேயில் இருந்து கிண்டிக்கு புறப்பட்டது. காலை 9.30 மணிக்கு ராஜாஜி சாலையில் தலைமை செயலகம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் முன் பக்கத்தில் திடீரென தீப்பிடித்தது.
என்ஜினில் இருந்து பரவிய தீ பேருந்து முழுவதும் பரவத் தொடங்கியது. இதையடுத்த சுதாரித்துக் கொண்டு டிரைவர் பேருந்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு வெளியில் குதித்தார்.
பீதியடைந்த பயணிகளும் பதறியடித்துக் கொண்டு இறங்கி ஓடினர். அடுத்த சில நொடிகளுக்கெல்லாம் மளமளவென பரவிய தீயில் பஸ்சின் முன்பகுதி உருக்குலைந்தது.
தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சுமார் மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பஸ்சின் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு்ள்ளது.
தலைமை செயலகம் அருகே இந்த விபத்து நடந்ததால் இன்று அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.