பிரியங்கா சந்தித்ததால் எனது பாவங்கள் கழுவப்பட்டு விட்டன: நளினி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை பிரியங்கா சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்பு குறித்த விவரங்களை நளினியின் வழக்கறிஞர் துரைசாமியின் ஜூனியரான வக்கீல் ராஜ்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிக் கொணர்ந்துள்ளார்.
சிறையில், நளினியும், பிரியங்காவும் தனியாக அமர்ந்து பேசியுள்ளனர். அந்தப் பேச்சுவார்த்தையின் உடன் யாரும் இருக்கவில்லை. மிகவும் உருக்கமாக இருந்துள்ளது அந்த சந்திப்பு.
இந்த சந்திப்பின்போது ராஜீவைக் கொல்ல உத்தரவிட்டது யார், விடுதலைப் புலிகள் அமைப்பினரா அல்லது வேறு யாருமா, ஏன் கொன்றீர்கள், கொல்லப்பட்டபோது நீங்கள் நேரில் பார்த்தீர்களா என்பது உள்பட பல்வேறு கேள்விகளை நளினியிடம் கேட்டுள்ளார் பிரியங்கா.
கதறி அழுத பிரியங்கா:
ஒரு கட்டத்தில் அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதுள்ளாராம் பிரியங்கா. பிரியங்காவின் பல கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் மெளனத்தையும், கண் கலங்கலையும் பதிலாகத் தந்துள்ளார் நளினி.
தனது சந்திப்பு குறித்து சகோதரர் பாக்யநாதனிடம் உருக்கமாக கூறியுள்ளார் நளினி. இதுகுறித்து பாக்யநாதன் கூறுகையில், எனது பாவங்கள் கழுவப்பட்டதாக நளினி கூறியுள்ளார். என்னை பிரியங்கா மன்னித்து விட்டதாக உணர்கிறேன். வாழ்நாள் முழுவதும் அவருக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.
இந்த சந்திப்பின் மூலம் ராஜீவ் காந்தி குடும்பத்தின் மீது நான் வைத்திருந்த மரியாதை, இப்போது மேலும் அதிகரித்து இருப்பதாகவும் நளினி கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் காரணமல்ல?:
பிரியங்காவின் சந்திப்பு குறித்து வக்கீல் துரைசாமி கூறுகையில், பிரியங்காவின் சந்திப்பு, அவர் கேட்ட கேள்விகளைப் பார்க்கும்போது, விடுதலைப் புலிகள் இதைச் செய்திருப்பார்களா என்ற சந்தேகத்தில் அவர் இருப்பதாக தெரிகிறது.
வேறு சில சக்திகள் விடுதலைப் புலிகளின் பெயரில் இதைச் செய்திருக்கலாமோ என்று பிரியங்கா சந்தேகப்படுவதாக தெரிகிறது.
ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் ஆன நிலையில், நளினி உள்ளிட்டோருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், யார் கொலை செய்யச் சொன்னது, ஏன் கொலை செய்யப்பட்டார் என்று பிரியங்கா கேட்பது மிகுந்த கவனத்துக்குரியது. இந்தக் கேள்விகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன.
இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு மீறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு வழக்கமான பார்வையாளர் அறையில் நடக்கவில்லை. சிறைக் கண்காணிப்பாளரின் அறையில் சந்திப்பு நடந்துள்ளது.
கைதி ஒருவரை பார்வையாளர்கள் சந்திக்கும்போது சிறை அதிகாரிகள் யாரேனும் உடன் இருக்க வேண்டும். ஆனால் யாரும் பிரியங்கா, நளினி சந்திப்பின்போது உடன் இல்லை. தனியாக இருந்துள்ளனர். இதனால் இருவரின் உயிருக்குமே ஆபத்து இருந்திருக்கிறது. என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம் என்றார் துரைசாமி.