ஆப்கான் படுகொலை- கோவிந்தசாமியின் உடல் சொந்த ஊர் வந்தது
டெல்லி: ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்ட கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கோவிந்தசாமியின் உடல் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
அவரது குடும்பத்தினருக்கு ராணுவம் ரூ.19 லட்சம் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
இந்திய ராணுவத்தின் பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேசன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் கோவிந்தசாமி. இவரும் மேலும் பல இந்தியர்களும் ஆப்கானிஸ்தானில் நெடுஞ்சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த 12ம் தேதி தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கோவிந்தசாமியும் உத்தரபிரதேச மாநிலம் காசியை சேர்ந்த மகேந்திர பிரதாப்சிங் என்பவரும் கொல்லப்பட்டனர்.
இருவரது உடல்களும் நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து, தனி விமானம் மூலம் நேற்று டெல்லி கொண்டு வரப்பட்டன.
விமான நிலையத்தில் இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் சயீத் மஹ்தூம் ரஹீம், எல்லைப்புற சாலைகள் அமைப்பின் தளபதி ஏ.கே.நந்தா உட்பட அதிகாரிகள் இருவரது உடல்களுக்கும் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் கோவிந்தசாமியின் உடல் தனி விமானம் மூலமாக நேற்று இரவு 7.30 மணிக்கு பெங்களூர் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து வேன் மூலமாக அவரது உடல் சொந்த ஊரான கே.திப்பனப்பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது.
உடலைக் கண்டு கோவிந்தசாமியின் குடும்பத்தினர் தரையில் விழுந்து புரண்டு அழுதது அங்கிருந்த அனைவரையும் கண்ணீரில் மூழ்கடித்தது.
பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கோவிந்தசாமியின் உடல் அவரது வைக்கப்பட்டுள்ளது. இன்று அவரது உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.
ரூ. 19 லடசம் நிதியுதவி:
இந் நிலையில் பலியான என்ஜீனியர் கோவிந்தசாமி குடும்பத்தினருக்கு இந்திய ராணுவம் சார்பில் ரூ.19 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பலியான மற்றொரு என்ஜீனியரான மகேந்திர பிரதாப் சிங் குடும்பத்தினருக்கு ரூ. 24 லட்சம் நஷ்டஈடாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications