டெல்லியில் இன்று ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் - பலத்த பாதுகாப்பு
டெல்லி: மிக பலத்த பாதுகாப்புடன் ஒலிம்பிக் ஜோதி இன்று தொடர் ஓட்டமாக டெல்லியில் எடுத்துச் செல்லப்படவுள்ளது. திபெத்தியர்களின் தடுப்பு முயற்சிகளை முறியடிக்க போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் பெய்ஜிங்கில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டமாக பல்வேறு நாடுகளை வலம் வந்து கொண்டுள்ளது.
இஸ்லாமாபாத்திலிருந்து ஒலிம்பிக் ஜோதி தற்போது டெல்லிக்கு வந்துள்ளது. இன்று அதிகாலை 1 மணியளவில் டெல்லிக்கு ஒலிம்பிக் ஜோதி வந்து சேர்ந்தது. அதை இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி பெற்றுக் கொண்டார். பிற்பகலில் டெல்லி நகரில் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
லண்டன், பாரீஸ், சான் பிரான்சிஸ்கோ என பல நாடுகளிலும் பிரச்சினைகளை சந்தித்த ஒலிம்பிக் ஜோதிக்கு டெல்லியில் எந்தவித இடையூறம் ஏற்படாத வகையில் மிக பலத்த பாதுகாப்புக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இன்றைய ஜோதி ஓட்டத்தில் 47 விளையாட்டுத் துறையினர் உள்பட 70 பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.
மக்கள் நடமாடத் தடை:
குடியரசுத் தலைவர் மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான 2.3 கிலோமீட்டர் தூரத்திற்கு ஜோதி ஓட்டம் நடைபெறுகிறது. ஜோதியுடன் 20 சீன கமாண்டோக்களும் உடன் வருகின்றனர்.
ஜோதி ஓட்டத்தையொட்டி பிற்பகல் 1 மணியிலிருந்து ஆறு மணி நேரத்திற்கு ராஜ்பாத் மற்றும் சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படும். அப்பகுதியில் பொதுமக்கள் நடமாடத் தடை விதிக்கப்படுகிறது. அங்குள்ள அலுவலகங்களின் ஜன்னல்களை மூடி வைக்குமாறும், ஊழியர்கள் யாரும் வெளியே வரக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜோதி ஓட்டம் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி கூறுகையில், பிற்பகலில் ஜோதி ஓட்டம் நடைபெறும். பாதுகாப்பு கருதி இதுதொடர்பாக விரிவாக கூற முடியாது. ஓட்டம் நடைபெறும் பகுதியில் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பி.டி.உஷா, மில்கா சிங், லியாண்டர் பயஸ், அஞ்சு பாபி ஜார்ஜ், நடிகர்கள் ஆமிர்கான், சைப் அலிகான் உள்ளிட்டோர் ஜோதியை ஏந்திச் செல்லவுள்ளனர்.
சச்சின் இல்லை:
சச்சின் டெண்டுல்கர் உடல் நலம் காரணமாக பங்கேற்க இயலாது எனத் தெரிவித்துள்ளார்.
ஜோதி ஓட்டம் நடைபெறும் பாதையில் பள்ளி மாணவ, மாணவியர் வரிசையாக நிறுத்தப்படுவர். ஜோதியை ஏந்திச் செல்பவர்களை உற்சாகப்படுத்தி தேசியக் கொடியை அசைப்பார்கள்.
பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஜோதி ஓட்டத்தைக் காண பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மூன்று கட்டமாக பாதுகாப்பு அளிக்கப்படும். முதல் வட்டத்தில் ஜோதி ஏந்திச் செல்பவரைச் சுற்றி சீன கமாண்டோக்கள் உடன் வருவர். 2வது வட்டத்தில் தேசிய பாதுகாப்புப் படையினர் வருவார்கள்.
இதுதவிர ஓட்டம் நடைபெறும் பகுதியில் உள்ள உயரமான கட்டடடங்களில் அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டு கண்காணிப்பார்கள். 2 ஹெலிகாப்டர்களும் பாதுகாப்புக்காக உடன் வரும் என்றார் கல்மாடி.
பாஜக ஆர்ப்பாட்டம்:
இதற்கிடையே, டெல்லியில் இன்று ஒலிம்பிக் ஜோதி ஒட்டம் நடைபெறும் போது, அமைதியான முறையில் திபெத்தியர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என டெல்லி பாஜக அறிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லி பாஜக தலைவர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், திபெத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய 200க்கும் மேற்பட்ட திபெத்தியர்களை சீன போலீஸார் கொன்று குவித்துள்ளனர். இதைக் கண்டித்தும், திபெத்தியர்களுக்கு எங்களது அனுதாபத்தைத் தெரிவித்தும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
திபெத் தன்னாட்சிப் பகுதியை சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக பாஜக அங்கீகரித்துள்ளது. அதேசமயம், திபெத் மக்களின் தலைவராக தலாய் லாமாவை சீன அரசு அங்கீகரிக்க வேண்டும். அவரை அமைதியின் தூதுவராக சீன அரசு கருத வேண்டும்.
ஒலிம்பிக் போட்டியை பெய்சிங்கில் நடத்துவதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் மனித உரிமைகளுக்கும், ஜனநாயகத்திற்கும் சீன அரசு மதிப்பளிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இதை வலியுறுத்தியே இந்த அமைதிப் போராட்டம்.
ஷாஹிதி பூங்காவில் அமைதியான முறையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்தில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications