போலீஸ் உளவாளி கொலை வழக்கிலும் கோபால் விடுதலை
கோபிசெட்டிப்பாளையம்: போலீஸ் உளவாளி ராஜாமணி கொலை செய்யப்பட்ட வழக்கிலும் நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு விடுதலை கிடைத்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலங்களில் நக்கீரன் கோபால் மீது பல வழக்குகள் போடப்பட்டன. இதில் படிப்படியாக அவர் விடுதலை ஆகி வருகிறார்.
நேற்று முன்தினம் ஆயுதம் வைத்திருந்ததாக கூறித் தொடரப்பட்ட பொடா வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் கோபால். இந்த நிலையில் நேற்று உளவாளி ராஜாமணி கொலை வழக்கிலிருந்தும் விடுதலையாகியுள்ளார்.
வீரப்பனின் நடமாட்டம் குறித்து போலீசுக்கு உளவு சொல்லி வந்தவர் ராஜாமணி. இவர் கடந்த 1998ம் ஆண்டு வீரப்பனால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக வீரப்பன், கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கெளடா, ரங்கசாமி, நக்கீரன் கோபால், மோகன், சரவணன், நக்சலைட்டுகள் சத்தியமூர்த்தி, ஜெயப்பிரகாஷ், முத்துக்குமார், மணிகண்டன் ஆகிய 11 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
விசாரணை நடந்து வந்த காலத்தில், வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகெளடா, ரங்கசாமி, சரவணன் ஆகியோர் இறந்து விட்டனர். மற்ற 6 பேர் மீதும் கோபிச்செட்டிப்பாளையம் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன் நேற்று தீர்ப்பளித்தார். 6 பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அனைவரையும் விடுவிப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
கோபால் மீது தொடரப்பட்ட வழக்குகளில் இதுவரை அந்தியூர் டீக்கடை கந்தவேல் கொலை வழக்கு, பக்தவச்சலம் கொலை வழக்கு, ஆயுதம் வைத்திருந்ததாக பொடா வழக்கு, உளவாளி ராஜாமணி கொலை வழக்கு ஆகியவற்றில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications