ஒலிம்பிக் ஜோதி- லே, கார்கிலில் பந்த்
டெல்லி: டெல்லியில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்திற்கு எதிராக காஷ்மீரின் லே, கார்கில் ஆகிய பகுதிகளில் பந்த் நடத்தப்பட்டது.
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியையொட்டி உலகெங்கும் வலம் வந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் ஜோதி, நேற்று டெல்லி வந்தது. அதிகாலையில் டெல்லி வந்த ஒலிம்பிக் ஜோதியின் தொடர் ஓட்டம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிற்பகலில் தொடங்கி மாலையில் அமைதியாக முடிவடைந்தது.
இந்த நிலையில் இந்த ஜோதி ஓட்டத்திற்குப் போட்டியாக திபெத்தியர்கள் போட்டி ஜோதி ஓட்டத்தை நடத்தினர்.
அதேபோல லடாக் பகுதியில், வசிக்கும் புத்தமதத்தினர் அமைதிப் பேரணியை நடத்தினர். இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்தியாவில் திபெத்தியர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட முதலாவது மிகப் பெரிய பேரணி இது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று காலை முதல் ஆயிரக்கணக்கான புத்த மதத்தினர், திபெத்தியர்கள் அங்குள்ள போலோ மைதானத்தில் குவிந்தனர்.
புத்த மத துறவிள், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், உள்ளூர்வாசிகள் என பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். கொட்டும் பணியையும் பொருட்படுத்தாமல் பேரணியில் அனைவரும் கலந்து கொண்டனர்.
லடாக் புத்த மத சங்கம், லாக் கோங்காப சங்கம் ஆகியவை இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
இதேபோல லே மற்றும் கார்கில் பகுதிகளில் பந்த் நடத்தப்பட்டது.
தாய்லாந்து செல்கிறது ஒலிம்பிக் ஜோதி:
இதற்கிடையே ஒலிம்பிக் ஜோதி நாளை தாய்லாந்து சென்றடைகிறது. சீனாவின் சிறப்பு விமானம் மூலம் இந்த ஜோதி தாய்லாந்து கொண்டு செல்லப்படுகிறது.