ஜி.எச். விரிவாக்கத்துக்கு சென்ட்ரல் ஜெயில் நிலம்
சென்னை: காலியாக உள்ள சென்னை மத்திய சிறையின் நிலத்தில் 10 ஏக்கர் அரசு பொது மருத்துவமனை விரிவாக்கத்துக்கு வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் அறிவித்தார்.
சட்டசபையில் முதல்வர் கருணாநிதி 110வது விதியின்கீழ் வாசித்த அறிக்கையில்,
சென்னை சென்ட்ரலில் இயங்கி வந்த மத்திய சிறை திருவள்ளூர் மாவட்டம் புழலுக்கு மாற்றப்பட்டது. தற்போது சென்ட்ரல் மத்திய சிறையின் 13.238 ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. இதில் 10 ஏக்கர் நிலத்தை அரசு பொது மருத்துவமனை விரிவாக்கத்துக்கு வழங்கப்படும்.
சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் இயங்கி வரும் அரசு பொது மருத்துவமனை 165 ஆண்டு கால பழமை வாய்ந்தது. இங்கு 2,722 படுக்கைகள் உள்ளன. 2000 மருத்துவ மாணவர்கள் இங்கு படித்து வருகின்றனர். 12,000 பேர் புற நோயாளிகளாக தினமும் இங்கு வந்து செல்கின்றனர்.
தற்போது இடப்பற்றாக்குறையால் இந்த மருத்துவமனை அவதிப்பட்டு வருகிறது. மருத்துவமனை விரிவாக்கம் குறித்த நீண்டகால கோரிக்கை ஏற்கப்படுகிறது. மத்திய சிறையின் நிலம் மருத்துவமனை விரிவாக்கத்துக்கு வழங்கப்படும்.
மீதமுள்ள நிலத்தில் மெட்ரோ ரயி்ல் திட்ட அலுவலகத்துக்கு ஒரு ஏக்கர் வழங்கப்படும். தமிழ்நாடு மின் வாரியத்தின் துணை மின் நிலையத்துக்காக 1.5 ஏக்கர் நிலம் வழங்கப்படும்.
அதேப்போல வடசென்னையில் இயங்கி வரும் ஸ்டான்லி மருத்துவமனையும் இடப்பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை கல்லூரியில் 1500 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மருத்துவமனையின் வளர்ச்சிப் பணிக்காக கடந்த ஆண்டு ரூ.100 கோடி தமிழக அரசு வழங்கியது.
தற்போது இந்த மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications