கோவிலில் விளக்கேற்றிய ஜெ. - அதிமுகவினரும் விளக்கேற்றி முழக்கம்

சித்ரா பெளர்ணமி தினத்தன்று மாலை 6.30 மணிக்கு அதிமுகவினர் தங்களது இல்லங்கள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் விளக்கேற்றி வைத்து, இருண்ட தமிழகத்திற்கு ஒளியேற்ற வாருங்கள் அம்மா என்று முழங்க வேண்டும் என ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர் ஒருவரின் ஆலோசனையின் பேரில்தான் இப்படி ஒரு உத்தரவை ஜெயலலிதா பிறப்பித்ததாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவியது.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் உத்தரவுக்கேற்ப நேற்று தமிழகம் முழுவதும் விளக்கேற்றி வைத்தனர். குத்து விளக்கு, அகல் விளக்கு, காமாட்சி விளக்கு என விதம் விதமான விளக்குகள் ஏற்றப்பட்டன. அதிமுகவினருக்குச் சொந்தமான சில வணிக வளாகங்களில் சீரியல் செட்டுகளையும் போட்டு அசத்தியிருந்தனர்.
கொடநாடு எஸ்டேட்டுக்கு கோடை விடுமுறைக்காக சென்றுள்ள ஜெயலலிதா, அங்குள்ள பிள்ளையார் கோவிலில் விளக்கேற்றினார். நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ஜெயலலிதா விளக்கேற்றியபோது அனைவரும் ஒளியேற்ற வாருங்கள் அம்மா என்று முழக்கமிட்டனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திலும் விளக்கேற்றி வைக்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, அமைப்புச் செயலாளர் சுலோச்சனா சம்பத், பதர் சயீத் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல தமிழகம் முழுவதும் விளக்கேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
600 விளக்கு வைத்து அசத்திய பிரமுகர்:
திருநெல்வேலி புறநகர் மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆய்க்குடியில் ஒன்றிய செயலாளர் கே.செல்லப்பன் என்பவர் பிரமாண்டமாக விளக்கேற்றி அசத்தினார்.
அதே பகுதியில் உச்சிபிள்ளையார் கோவில் என்ற மண்பொத்தை (மலை) உள்ளது. இதில் கீழிலிருந்து மலையின் உச்சிபகுதி வரையிலுள்ள 300 அடி உயரத்திற்கு இருபுறங்களிலும் 600 விளக்குகள் வைத்து தீபம் ஏற்றி நூதன முறையில் வழிபாடு நடத்தினார்.
மலை முழுவதும் தீப வழிபாடு நடந்தததை அப்பகுதி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தனர்.












Click it and Unblock the Notifications