கொடைக்கானல் வனப்பகுதியில் மேலும் 3 நக்சல்கள் பிடிபட்டனர்
கொடைக்கானல்: கொடைக்கானல் வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நக்சலைட் நவீன் பிரசாத்துடன் பதுங்கியிருந்த மேலும் 3 பேரை போலீஸார் வளைத்துப் பிடித்துள்ளனர். அவர்களுடன் இருந்த மற்ற 10 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெரியகுளம் அருகே முருகமலை வனப்பகுதியில் ஆயுதப்பயிற்சி மேற்கொள்ள முயன்ற நக்சலைட் தீவிரவாதிகள் வேல்முருகன், பழனிவேல், முத்துச்செல்வம், கார்த்திக், ஈஸ்வரன், பாலா என்ற பால கிருஷ்ணன் மற்றும் இக்கும்பலின் தலைவன் சுந்தரமூர்த்தி ஆகிய 7 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், தேனி மாவட்டம் வருசநாடு வனப்பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளைக் கைது செய்ய முயன்றபோலீசாருக்கும், தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
துப்பாக்கி சண்டை-நக்ஸல் பலி:
தப்பி ஓடிய தீவிரவாதிகள் கொடைக்கானல் வட்டம், வடகவுஞ்சி அருகில் மலைப்பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், நேற்று முன்தினம் அவர்களை கைது செய்ய போலீசார் முயன்றபோது துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இதில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் (வயது 30) எனும் நவீன் பிரசாத் சுட்டுக் கொல்லப்பட்டார்.
3 நக்ஸலைட்டுகள் சிக்கினர்:
இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதில் காளிதாஸ் உள்ளிட்ட 3 பேர் சிக்கியுள்ளனர்.
இவர்களில் காளிதாஸ், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை அடுத்த தன்னையபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை பெயர் அரைகாசு என்கிற ஆரோக்கியம். காளிதாஸ் மீது காரி மங்கலம், கிருஷ்ணாபுரம், மாரன்டஹள்ளி, தேன்கனிக்கோட்டை, பெண்ணாகரம், தர்மபுரி, மதிகொண்டான் பாளையம் ஆகிய இடங்களில் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஆயுதம் திருட்டு, பதுக்கல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய காளிதாஸ் 2003ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வந்தார்.
2002-ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நக்சலைட் தீவிரவாதிகளை போலீசார் மடக்கிய போது காளிதாஸ் தப்பியுள்ளார். முருகமலை வனப்பகுதியில் நக்சலைட் தீவிரவாதிகளை போலீசார் வேட்டையாடிய போதும் இவர் தப்பினார்.
சந்திரா தலைமையில் 14 நக்ஸல்கள்:
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் இப்பகுதியில் பெண் நக்சலைட் சந்திராவின் (சுந்தரமூர்த்தியின் மனைவி) தலைமையில் 14 பேர் நக்ஸலைட்டுகள் இயங்கி வந்தது தெரிய வந்துள்ளது.
14 பேர் விவரம் - சந்திரா, கமலநாதன், பாஸ்கரன், தமிழ்வாணன், சித்தானந்தன், ராமன், பச்சையப்பன், இளங்கோ, கோபால், செல்வம், செல்லப்பன், சதாசிவம், ஜெகன், நவீன் பிரசாத்.
மேலும் 10 பேருக்கு வலை:
இவர்களில் பிரசாத் கொல்லப்பட்டு விட்டார். 3 பேர் பிடிபட்டுள்ளனர். மற்ற 10 பேரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தப்பி ஓடிய தீவிரவாதிகள் கும்பக்கரை வனப்பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகிக்கப் படுகிறது. அவர்களை பிடிப்பதற்காக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பாரி, தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு சுதாகர் ஆகியோர் தலைமையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை மேற்கொள்ளப் படுகிறது.
வாகன சோதனை:
கும்பக்கரை நீர்வீழ்ச்சிக்கு வரக் கூடிய வாகனங்களையும் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இப்பகுதியிலுள்ள சோத்துப்பாறை அணைப் பகுதி, மஞ்சளாறு அணைப் பகுதி, முருகமலைப் பகுதி ஆகிய வனப் பகுதிகளிலும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
வனப் பகுதியில் தேடுதல் வேட்டை:
தப்பிய நக்சலைட் தீவிரவாதிகள் கேரள வனப் பகுதிக்குள் ஊடுருவி இருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது. டிஐஜி கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் கேரள வனப்பகுதிக்குச் செல்லும் கொடைக்கானல் மலைப்பகுதியில் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.