வாபஸ் பெற்றது எல்.ஜி.அணி: வைகோ அணியே உண்மையான மதிமுக!

கடந்த 2006ம் ஆண்டு மதிமுகவிலிருந்து எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் விலகினர். அதன் பின்னர் திமுகவின் ஆதரவுடன் இருவரும் மாநிலம் முழுவதும் மதிமுகவினரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மதிமுக செயற்குழு, பொதுக்குழுவைக்கூட்டுவதாகவும் அறிவித்தனர். இந்த நிலையில் தாங்கள்தான் உண்மையான மதிமுக என்று எல்.ஜி. தரப்பு தேர்தல் ஆணையத்திலும் புகார் கொடுத்தது. இதற்கு வைகோ தரப்பில் ஆதாரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், தேர்தல் ஆணையத்தில் வைகோ நேரில் ஆஜராகி வீடியோ ஆதாரங்களையும், உரிய ஆவணங்களையும் தாக்கல் செய்தார். மேலும், தனது கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களையும் நேரில் கொண்டு போய் தேர்தல் ஆணையர்கள் முன்பு நிறுத்தினார்.
ஆனால் வழக்கை தாக்கல் செய்த எல்.ஜி. தரப்போ விசாரணைக்கு ஒருமுறை கூட வரவில்லை. கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் தேவை என்று மட்டும் கோரி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் விசாரணை நடந்தது. அப்போது வைகோ, மதிமுக எம்.பிக்கள் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், பொள்ளாச்சி கிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆஜராகினர். ஆனால் எல்.ஜியும், செஞ்சி ராமச்சந்திரனும் வரவில்லை.
மாறாக அவர்களது வக்கீல் தனஞ்செயன் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், எங்களுக்குப் போதுமான எம்.எல்.ஏ ஆதரவு இல்லை. எனவே மதிமுகவுக்கு உரிமை கோரி தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது. இதனால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.
பின்னர் வெளியில் வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், போலியான ஆவணங்களைத் தயாரித்து அதை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் போட்ட நாடகம், மோசடித்தனம் அம்பலமாகியுள்ளது. நாங்கள்தான் உண்மையான மதிமுக என்பது நிரூபணமாகியுள்ளது. எங்களைத்தான் தேர்தல் ஆணையம் உண்மையான மதிமுக என்று அங்கீகரித்துள்ளது என்றார்.
தேவர் சிலை அவமதிப்புக்கு கண்டனம்:
இதற்கிடையே வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதுரையில் தேவர் சிலையின் மீது அழுக்கையும், அசிங்கத்தையும் சில கயவர்கள் வீசியுள்ள இழிசெயல் மன்னிக்க முடியாத அக்கிரமம் ஆகும். அவரது சிலையை அவமதித்த செயல் எண்ணற்ற மக்களின் இதயத்தில் வேலாக பாய்ந்துள்ளது. இந்த ஈனத்தனமான, கோழைத்தனமான செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களின் உள்ளக் குமுறலை பிரதிபலித்த அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் தலைவர் டாக்டர் சேதுராமனை கைது செய்தது கண்டனத்துக்குரியது. அவர் உள்பட கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். சமுதாய நல்லிணக்கத்தையும், அமைதியையும் பாதுகாப்பதில் அனைவரும் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications