மதுரை தேவர் சிலை அவமதிப்பு-மன நோயாளி கைது
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை நேற்று அவமதிக்கப்பட்டிருந்தது. இதனால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான தேவர் சமுதாயத்தினர் கூடி அவமதித்தவரை கைது செய்யக் கோரி போராட்டத்தில் குதித்தனர்.
பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன. இந்த நிலையில், போலீஸார் வழக்குப் பதிவு தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.
இந் நிலையில் இன்று அதிகாலை, தேவர் சிலை உள்ள பகுதியில் ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரைப் போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவரது பெயர் திருவழகு என்றும், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.
இதுகுறித்து மதுரை மாநகர காவல்துறை ஆணையர் நந்தபாலன் செய்தியாளர்களிடம் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா, லிங்கவாடி கிராமத்தைச் சேர்ந்த திருவழகு என்பவர் சிலை அவமதிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தேவர் சிலை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபிள் ஜெயதாஸ், இன்று அதிகாலை, அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிக் கொண்டிருந்த திருவழகைப் பிடித்து அவரது பையை சோதனையிட்டார்.
அப்போது அந்தப் பையில், ஒரு பாட்டில் தண்ணீர் இருந்தது. இன்னொரு பாட்டிலில் மலத்தைக் கரைத்து வைத்திருந்தார். மேலும் சதாம் உசேனின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் ஒன்றும் வைத்திருந்தார்.
உடனடியாக அவரை தல்லாகுளம் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின்போது தேவர் சிலை மீது மனித மலத்தையும், சாணியையும் தான் தான் தெளித்ததாக ஒத்துக் கொண்டார். மேலும், நாட்டில் சிலைகளே இருக்கக் கூடாது. எல்லா சிலைகளையும் இப்படித்தான் அசிங்கப்படுத்தப் போகிறேன் என்றும் கூறினார்.
அவர் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் மன நல பாதிப்புக்காக சிகிச்சை பெற்ற விவரமும் தெரிய வந்துள்ளது. தற்போது கோரிப்பாளையம் தர்காவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இருப்பினும் உண்மையிலேயே அவர் மன நோயாளிதானா அல்லது அப்படி நடிக்கிறாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தேவர் சிலை அவமதிப்பைத் தொடர்ந்து நடந்த மோதலில் 15 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலருக்கு வலை வீசப்பட்டுள்ளது என்றார் நந்தபாலன்.