அமெரிக்க தீவிரவாதப் பட்டியலில் தொடரும் நேபாள மாவோயிஸ்டுகள்
வாஷிங்டன்: நேபாளத்தில் கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையிலும், அவர்களை அமெரிக்க அரசு இன்னும் தீவிரவாதக் குழுக்களின் பட்டியலிலிருந்து நீக்கவில்லை. இப்போதைக்கு தொடர்ந்து மாவோயிஸ்டுகள் தீவிரவாத குழுக்களின் பட்டியலிலேயே நீடிப்பார்கள் எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
உலகளவில் பல அமைப்புகளை தீவிரவாத குழுக்களின் பட்டியலில் அமெரிக்கா வைத்துள்ளது. இதில் நேபாள மாவோயிஸ்ட்டும் ஒன்று. ஆனால் மாவோயிஸ்ட் அமைப்பு அரசியல் கட்சியாக அவதாரம் எடுத்து, நேபாள தேர்தலில் பங்கேற்று ஆட்சியையும் பிடித்துள்ளது.
இந்த நிலையில் மாவோயிஸ்ட் அமைப்பை தீவிரவாதப் பட்டியலிலிருந்து அமெரிக்கா நீக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துரை துணை செய்தித் தொடர்பாளர் டாம் கேஸி கூறுகையில், மாவோயிஸ்ட் கட்சியை தீவிரவாதக் குழுக்கள் பட்டியலிலிருந்து நீக்குவது தொடர்பாக ஏதாவது விவாதம் நடந்து வருகிறதா என்பது குறித்து எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.
இதில் சட்டப் பிரச்சினைகள் உள்ளன. இருப்பினும் தீவிரவாதக் குழுக்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள அமைப்புகள் ஆயுதங்களைக் கைவிட்டு சாதாரண அரசியலுக்கு திரும்பினால் நிச்சயம், அந்த அமைப்பை பட்டியலிலிருந்து விலக்குவது குறித்து அமெரிக்க அரசு நிச்சயம் பரிசீலிக்கும்.
ஆனால் நேபாள விவகாரத்தைப் பொறுத்தவரை இதுவரை அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போதையே நிலையே தொடரும் என்றார் அவர்.
ஈரான் அதிபர் மஹ்மூத் அகமதியேஜத் இந்தியாவுக்கு வருவது குறித்த கேள்விக்கு கேஸி கூறுகையில், ஈரானுடன் தொடர்புடைய இந்திய அரசு உள்பட, எந்த அரசாக இருந்தாலும் யுரேனியம் திட்டம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபை மற்றும் சர்வதேச அமைப்புகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை, நிபந்தனைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்த வேண்டும்.
ஒரு நாடு, இன்னொரு நாட்டுடன் வைத்துக் கொள்ளும் நட்புறவு குறித்து அமெரிக்கா தீர்மானிக்க முடியாது. இது இந்தியாவுக்கும் பொருந்தும். எனவே ஈரான் அதிபர், இந்தியாவுக்கு செல்வது குறித்து அமெரிக்கா கருத்து சொல்ல வேண்டியதில்லை.
இருப்பினும் யுரேனியத் திட்டத்தை நிறுத்துவது தொடர்பாக சர்வதேச அமைப்புகளின் நிபந்தனைகளை ஈரான் பூர்த்தி செய்ய வேண்டும் என இந்தியா, ஈரானை கேட்டுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
பல நாடுகள், குறிப்பாக ஐரோப்பிய யூனியனில் உள்ள பல நாடுகள், எங்களுடன் நல்லுறவை வைத்துள்ள அதே வேளையில் ஈரானுடனும் நட்புறவுடன் உள்ளன. அதை எப்படி பராமரித்துக் கொள்வது என்பதை அவைதான் முடிவு செய்ய வேண்டும்.
எங்களுடன் நட்பாகவும், அதேசமயம் ஈரானுடனும் உறவு வைத்துள்ள நாடுகள், ஆபத்தை விளைவிக்கும் யுரேனியத் திட்டத்ைத நிறுத்துமாறு கேட்டுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ள விரும்புகிறோம்.
ஹிஸ்புல்லா, ஹமாஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஈரான் உதவக் கூடாது என்று அவை ஈரானை கேட்டுக் கொள்ள வேண்டும். உலக அரங்கில் பொறுப்பான நாடாக நடந்து கொள்ள வேண்டும் என ஈரானை அந்த நாடுகள் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றார் கேஸி.
நேபாள தலித்களுக்கு பாதுகாப்பு, அங்கீகாரம்:
இதற்கிடையே, நேபாளத்தில் வசிக்கும் தலித் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று நியூயார்க் சட்டப் பல்கலைக்கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக 89 பக்க அறிக்கை ஒன்றை அப்பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகளுக்கான மையம் வெளியிட்டுள்ளது. அதில், நேபாளத்தில் புதிதாக அமையும் அரசு உருவாக்கவுள்ள புதிய அரசியல் சாசனச் சட்டத்தில், தலித் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு பாதுகாப்பும், அங்கீகாரமும் கிடைக்க வகை செய்ய வேண்டும்.
கடந்த 2000 ஆண்டுகளுக்கும் மேலாக நேபாள தலித்கள் பெரும் அடக்குமுறைகளையும், அவமானங்களையும் சந்தித்து வருகின்றனர். ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்ட நிலையில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். ஜாதி அடிப்படையில் தனி மனித சுதந்திரம் முற்றிலும் இல்லாத நிலையில் தலித் மக்கள் உள்ளனர்.
எனவே புதிய அரசு உருவாக்கும் அரசியல் சாசன சட்டத்தில், தலித் மக்களுக்கு உரிய அங்கீகாரமும், பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும்.
ஜாதிக் கொடுமைகள், பாரபட்சங்கள் ஒழிக்கப்பட வேண்டும். அனைவரும் சமமான முறையில் வாழ வழி செய்யப்பட வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.