எந்த நாட்டுடனும் ராணுவ கூட்டணி இல்லை-இந்தியா
டெல்லி: இந்தியா எந்த நாட்டுடனும் ராணுவ கூட்டணி அமைக்காது என மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனி தெரிவித்தார்.
அதே நேரத்தில் பல நாடுகளுடன் ராணுவ ஒத்துழைப்பை கோருவதோடு, கூட்டு ராணுவ பயி்ற்சிகளையும் நடத்துவோம் என்றார்.
பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகத்துக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான மானிய கோரிக்கைகள் மீது இன்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது.
அதில் கலந்து கொண்டு பேசிய பல்வேறு கட்சிகளி்ன் எம்பிக்களும் சீனா, பாகிஸ்தானி்ன் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பாதுகாப்புத்துறைக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், பாதுகாப்புப் படையினருக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று கோரினர்.
இதற்கு பதிலளித்து ஆண்டனி பேசுகையில்,
இந்தியா சுயமான ராணுவ கொள்கையை பின்பற்றும். அனைத்து நாடுகளுடனும் குறிப்பாக அண்டை நாடுகளுடன் நல்லுறவையே இந்தியா விரும்புகிறது.
பிற நாடுகளுடன் இணைந்து கூட்டு ராணுவ, விமானப் படை, கடற்படை பயிற்சிகள் மேற்கொள்வது தொடரும். இதன்மூலம் இந்தியப் படைகளின் செயல்திறன் அதிகரிக்கிறது.
டி.ஆர்.டி.ஓவின் ஆராய்ச்சி மற்றும் ஆயுத உற்பத்திப் பணிகள் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றன. இதனால் ஆயுத இறக்குமதிகளௌ குறைக்க முடிந்துள்ளது.
அதே நேரத்தில் இலகு ரக போர் விமானமான எல்.சி.ஏவைத் தயாரிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. 1974ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டுக்குள் இத் திட்டம் வெற்றிகரமாக நிறைவடையும் என்றார் ஆண்டனி.