சட்டசபையில் அழுத எம்எலஏ-சமாதானம் சொன்ன அமைச்சர்
சென்னை: தனக்கு தொடர்ந்து பேச வாய்ப்பு தராததால் சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ கண்ணீர் விட்டு அழுதார்.
சட்டசபையில் இன்று கல்வித்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது.
அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோபிநாத் பேசுகையில், முதலாம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் என்று உள்ள தால் எல்லை மாவட்டங்களில் படிக்கக்கூடிய தெலுங்கு மாணவர்கள் கஷ்டப்படுகிறார்கள்.
இதனால் சுமார் 1 லட்சம் தெலுங்கு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
அப்போது சபாநாயகர் குறுக்கீட்டு, உங்களுக்கு பேச ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டது. உட்காருங்கள் என்று கூறி அடுத்த உறுப்பினரை பேச அழைத்தார்.
தன்னை தொடர்ந்து பேச விடாமல் தடுத்ததால் மனம் நொந்த அவர் இருக்கையில் அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதார். இதைப் பார்த்த மற்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் செய்வதறியாது தவித்தனர்.
இதை கவனித்த சபாநாயகர், உடனே கோபிநாத்திற்கு மேலும் ஒரு நிமிடம் பேச வாய்ப்பு கொடுத்தார். ஆனால் கோபிநாத்தால் பேச முடியவில்லை. தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார்.
இதை கவனித்த கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எழுந்து, உங்கள் நிலைமை அரசுக்கு புரிகிறது. நிச்சயம் உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என அவருக்கு ஆறுதல் தரும் வகையில் பேசி அவரை சமாதானப்படுத்தினார்.