பா.பி. பந்த் பிசுபிசுப்பு: கார்த்திக் சாலை மறியல்-பஸ்கள் மீது தாக்குதல்: போக்குவரத்து நிறுத்தம்!
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையை அவமதித்ததைக் கண்டித்து தென் மாவட்டங்களில் இன்று பந்த் நடத்தப்படும் என பார்வர்ட் பிளாக் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. அதன் படி இன்று பந்த் அனுசரிக்கப்பட்டது.
மொத்தம் 8 மாவட்டங்களில் பந்த் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த பந்த்திற்கு பெரிய அளவில் ஆதரவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. தேவர் இனத்தவர் அதிகம் வசிக்கும் கிராமங்களில் மட்டுமே கடைகள் மூடப்பட்டிருந்தன.
இன்று காலை பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் தென்காசிக்கு வருகை தந்தார். அங்கு நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தர்மத்திற்காகவும், நியாயத்திற்காகவும் இநத்ப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கோட்டை வரை எங்கள் குரல் கேட்க வேண்டும்என்பதற்காக அமைதியாகவும், நியாயமாகவும் செயல்பட்டு வருகிறோம்.
எங்கள் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். எங்களது உரிமையை யாருக்கும் விட்டுத் தர மாட்டோம். இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். நியாயத்தின் அடிப்படையிலும், உணர்வுப்பூர்வமாகவும் இந்தப் போராட்டத்ைத நடத்தி வருகிறோம்.
வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்கக் கூடாது. மக்கள் நலனுக்காக தொடர்ந்து பார்வர்ட் பிளாக் போராடும். இந்த சேனையை யாரும் தடுக்க முடியாது என்றார் கார்த்திக்.
பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு நெல்லை சென்றார். நெல்லை ஜங்ஷன் பகுதியில் உள்ள தேவர் சிலைக்கு மாலை போட்ட கார்த்திக் அங்கு தனது கட்சியினரோடு சாலை மறியல் போராட்டத்தில் சிறிது நேரம் ஈடுபட்டார். சாலையில் அமர்ந்து அவர் போராட்டம் நடத்தினார். அதன் பின்னர் அவர் மதுரைக்குக் கிளம்பிச் சென்றார்.
கார்த்திக் வருகையையொட்டி அப்பகுதியில் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
இரு பஸ்கள் உடைப்பு:
இந்த நிலையில், நெல்லை - ஆலங்குளம் இடையே உள்ள மாராந்தை என்ற இடத்தில் தென்காசியிலிருந்து நெல்லை வந்த அரசுப் பேருந்து தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கி உடைக்கப்பட்டது.
இதேபோல நெல்லை பேட்டை பகுதியில் ஒரு அரசுப் பேருந்து தாக்கி சேதப்படுத்தப்பட்டது.
பந்த் காரணமாக மதுரை, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பதட்டமான பகுதிகளில் போலீஸார் அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளனர். தேவர் சிலைகளுக்கு முழு அளவில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிற தலைவர்கள், ஜாதித் தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் பஸ்கள் நிறுத்தம்:
மதுரையில் இன்றும் பல இடங்களில் பல்வேறு அமைப்பினர் கல்வீச்சு, சாலை மறியல் ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கோரிப்பாளையத்தில் தேவர் சிலை முன்பு சாலை மறியல் செய்ய முயன்ற 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோரிப்பாளையம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போலீஸார் அதிக அளவில் இப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.
செக்கானூரணி, திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் பஸ்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 டிரைவர்கள் காயமடைந்தனர்.
இதன் காரணமாக மதுரை மற்றும் விருதுநகர், தேனி போன்ற இடங்களுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.