சோனியாவுக்கு ராஜீவ் கொலையாளிகள் நன்றிக் கடிதம்
வேலூர்: வேலூர் சிறையில் நளினியை பிரியங்கா சந்தித்துப் பேசியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து நளினியின் கணவர் முருகன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சோனியாவுக்கும், பிரியங்காவுக்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர்.
பிரியங்கா கடந்த மாதம் 19-ந் தேதி வேலூருக்கு ரகசியமாக வந்தார். வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை சந்தித்துப் பேசினார். ராஜீவை யார் கொன்றது, எதற்காக கொன்றார்கள், விடுதலைப்புலிளுக்கு இதில் தொடர்புண்டா என்பது உள்பட தனது பல்வேறு சந்தேகங்களை அவர் நளினியிடம் கேட்டறிந்தார்.
இந்த சந்திப்பு பல்வேறு விதமான கருத்துக்களை எழுப்பியுள்ளது. இந்த சந்திப்பால், நளினியின் கணவர் முருகன் அதிர்ச்சி அடைந்ததாகவும், அவர் நளினியுடன் பேச மறுத்து விட்டதாகவும், உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால் அதற்கு மாறாக, பிரியங்காவின் சந்திப்பு தங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக கூறி முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சோனியாவுக்கும், பிரியங்காவுக்கும் கடிதம் எழுதியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜீவ் கொலையாளிகளுக்கு தேவையான சட்ட உதவிகளை செய்து வரும் வக்கீல்கள் துரைசாமி, இளங்கோவன் ஆகியோர் நேற்று முன்தினம் வேலூர் சிறைக்குச் சென்றனர். அங்கு நளினி, அவருடைய கணவர் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை சந்தித்து பேசினார்கள்.
அப்போது பிரியங்கா தன்னிடம் என்னவெல்லாம் பேசினார் என்பது பற்றிய விவரங்களை நளினி வக்கீல்களிடம் கூறினார். இதே போல மற்ற கொலையாளிகளும் இந்த சந்திப்பு தொடர்பான தங்கள் கருத்துக்களை வக்கீல்களிடம் தெரிவித்தனர்.
பின்னர் வெளியில் வந்த வக்கீல்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரியங்கா, நளினியை சந்தித்து பேசியது மற்ற கைதிகளுக்கும் மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது. இது சம்பந்தமாக நளினியின் கணவர் முருகன் சோனியாவுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
அதில் உங்கள் அன்புக்கும், அமைதி நடவடிக்கைகளுக்கும், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
சாந்தன், பிரியங்காவுக்கு எழுதிய கடிதத்தில், நீங்கள் சிறைக்கு வந்து, நளினியை சந்தித்தது வேலூர் சிறைக் கைதிகளை கெளரவப்படுத்தியுள்ளது.
1983-ம் ஆண்டு இலங்கை தமிழர்கள் மீது இந்திரா காந்தி காட்டிய பாசத்தால் அவர் மீது எனக்கு மாறாத அன்பு உண்டு. நீங்கள் இந்திரா காந்தி போலவே இருக்கிறீர்கள் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் சாந்தன்.
தூக்கு தண்டனை கைதி பேரறிவாளனும், பிரியங்காவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
நளினியிடம், பிரியங்கா விடுதலைப்புலிகள் தொடர்பாக சில விவரங்களை கேட்டு இருக்கிறார். எனது தந்தைக்கு ஏற்பட்ட கதி இனியும் எங்கள் குடும்பத்தினருக்கு நேரக்கூடாது. விடுதலைப் புலிகளுக்கு இப்போது கோபம் இருந்தால், எங்கள் குடும்பம் மீது வெறுப்பு இருந்தால் அதை மறந்து விட சொல்லுங்கள் என்றும் பிரியங்கா, நளினியிடம் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார் என்று வக்கீல்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நளினி சிறையில் 17 ஆண்டுகளை கழித்துள்ளதால் அவரை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யவுள்ளதாகவும் துரைசாமி தெரிவித்தார்.